தமிழ்நாடு

காதல் மனைவியை பிரித்ததால், அவரது வீட்டு முன்பே தற்கொலை செய்துகொண்ட கணவன் - ஜோலார்பேட்டை அருகே சோகம்!

ஜோலார்பேட்டை அருகே காதல் மனைவியைப் பெற்றோர் பிரித்ததால் விஷம் குடித்து கணவன் தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதல் மனைவியை பிரித்ததால், அவரது வீட்டு முன்பே தற்கொலை செய்துகொண்ட கணவன் - ஜோலார்பேட்டை அருகே சோகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருப்பத்தூர் மாவட்டம், சந்திரபுரம் செட்டிப்பட்டறை கிராமத்தைச் சேர்ந்தவர் சக்தி முருகன். கட்டட வேலை செய்துவந்த சக்தி முருகனும், அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரும் காதலித்து வந்தனர். இந்த காதலுக்குப் பெற்றோர் மத்தியில் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, இருவரும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி, கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.

இதையடுத்து, முருகன் இருக்கும் இடத்தை தெரிந்துகொண்ட பெண்ணின் வீட்டார், அங்கு வந்து மகளை அழைத்துக்கொண்டு சென்றுள்ளனர். பின்னர் சக்தி முருகனிடமிருந்து தங்களது மகளைப் பிரித்த பெற்றோர், ஏலகிரி கிராமத்திலுள்ள உறவினர் வீட்டில் வலுக்கட்டாயமாகத் தங்கவைத்துள்ளனர்.

பின்னர், தாய்மாமனுடன் அந்தப் பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். இதனையறிந்த சக்தி முருகன், மனைவி இருந்த இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது பெண்ணின் உறவினர்கள் அவரைச் சந்திக்க விடாமல் தடுத்துள்ளனர். சக்தி முருகன் எவ்வளவு போராடியும் தனது மனைவியுடன் பேச முடியவில்லை.

காதல் மனைவியை பிரித்ததால், அவரது வீட்டு முன்பே தற்கொலை செய்துகொண்ட கணவன் - ஜோலார்பேட்டை அருகே சோகம்!

இதனால், மனமுடைந்த சக்தி முருகன், மனைவி அடைத்துவைக்கப்பட்டிருந்த வீட்டின் முன்பே, விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துமனைக்குத் தூக்கிச் சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே சக்தி முருகன் உயிரிழந்துள்ளார்.

இதுபற்றி தகவல் அறிந்த சக்தி முருகனின் பெற்றோர் மருத்துவமனைக்குச் சென்று மகனின் உடலைப்பார்த்து கதறி அழுதனர். பின்னர், மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories