கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் செம்மண் கடத்தல் அதிகளவில் நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், கொண்டனூர் வனப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் சட்டவிரோதமாக மண்ணை வெட்டி எடுத்த கும்பல் சிக்கியுள்ளது. அமைச்சர் வேலுமணியின் ஆதரவோடு செம்மண் கொள்ளை நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
இதுகுறித்து தி.மு.க சுற்றுச்சூழல் அணியின் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை தடாகம் பகுதியில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வரும் 183 செங்கல் சூளைகளை மூட உத்தரவிட்டு சில வாரங்களே ஆன நிலையில் மீண்டும் அந்தப் பகுதியில் மண் வெட்டி எடுக்கப்படுவது குறித்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
ஆனைமலை கொண்டனூர் வனப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் சட்டவிரோதமாக மண்ணை வெட்டி எடுத்த கும்பல் சிக்கியுள்ளது. உள்ளூர் அமைச்சரின் மேற்பார்வையில் இந்த இயற்கை கொள்ளை நடைபெறுவதாகத் தகவல் கிடைத்துள்ளது.
துறை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பெயரளவில் ஒரு கைது மற்றும் ஒரு லாரி பறிமுதல் என நிறுத்திக்கொள்கின்றனர். ஆனால் குற்றம் செய்யும் அந்த முக்கிய நபரின் மேல் காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?
ஏற்கனவே தொண்டாமுத்தூர் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பல இடங்களில் மண்ணை வெட்டி இதே செங்கல் சூளைகளுக்கும், சுரங்கங்களுக்கும் விற்று கோடிக்கணக்கில் கொள்ளை அடித்துள்ளனர்.
தண்ணீரே சென்று சேராத இடத்தில் குளம் தோண்டுகிறோம் என்ற பெயரில் தொண்டாமுத்தூரில் பல இடங்களில் 40 அடிக்கும் மேல் மண்ணை வெட்டி கொள்ளை அடித்துள்ளனர்.
கொள்ளை அடிப்பவர்கள் கூண்டில் ஏறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். தி.மு.க கழக ஆட்சி அமைந்தவுடன் இதுகுறித்த உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.