தமிழ்நாடு

“எஸ்.பி.வேலுமணி உதவியோடு உப்பு நீர் விநியோகத்தில் பெரும் குளறுபடி” - தி.மு.க MLA கண்டனம்!

கோவை மாநகராட்சி பகுதிகளில், உப்பு நீர் விநியோகம் சீரான முறையில் வழங்காமல், குளறுபடி செய்து, மக்களை பரிதவிக்க விடுவது சரியா என தி.மு.க எம்.எல்.ஏ கார்த்திக் கேள்வி எழுப்பியுள்ளார்.

“எஸ்.பி.வேலுமணி உதவியோடு உப்பு நீர் விநியோகத்தில் பெரும் குளறுபடி” - தி.மு.க MLA கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உதவியோடு உப்புநீர் விநியோக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாமலேயே, மக்களின் வரிப்பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. மக்களின் வரிப்பணத்தை வீணடித்து, சரியான முறையில் தங்களது பராமரிப்புப் பணிகளை செய்யாத ஆழ்குழாய் கிணறு பராமரிக்கும் ஒப்பந்ததாரர்கள் மீது கோவை மாநகராட்சி நிர்வாகம் இன்னும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு, உப்பு நீர் வழங்கும் ஆழ்குழாய் கிணறு பராமரிப்பு பணிகள் செய்வதற்கு, கோவை மாநகராட்சியால் ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் அ.தி.மு.க கட்சியினருக்கே வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி பகுதிகளில், ஒரு வார்டில் 20, ஒரு வார்டில் 30, மற்றொரு வார்டில் 40, என்ற எண்ணிக்கையில் ஆழ்குழாய் கிணறுகள் உள்ளது. சராசரியாக ஒரு வார்டுக்கு, ஏறக்குறைய 25 ஆழ்குழாய் கிணறுகள் உள்ளது. இதில் ஒரு ஆழ்குழாய் கிணறு பராமரிப்புக்கு மாதம் ஒன்றுக்கு சுமார் ரூ. 2324.00 வீதம் கோவை மாநகராட்சியால், ஆழ்குழாய் கிணறு பராமரிப்பு ஒப்பந்ததாரருக்கு வழங்கப்படுகிறது. இதை கணக்கிட்டால் ஒரு வார்டுக்கு, ஒரு ஆண்டுக்கு சராசரியாக சுமார் ஏழு இலட்சம் ரூபாய் மக்களின் வரிப்பணம் செலவு செய்யப்படுகிறது.

இதன்படி, கோவை மாநகராட்சி பகுதிகளில் கணக்கிட்டால், ஒரு ஆண்டுக்கு சுமார் பல கோடி ரூபாய் கோவை மாநகராட்சியால், ஆழ்குழாய் கிணறு பராமரிப்பு ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படுகிறது.

ஆனால், மக்களின் வரிப்பணமான, இவ்வளவு பெரிய தொகையை செலவழித்தும், பல பகுதிகளில். உப்புநீர் சரியான முறையில் வழங்கப்படுவதில்லை. பல இடங்களில் முறையான உப்பு நீர் விநியோகம் மற்றும் உடைப்பு ஏற்படும் உப்பு நீர் குழாய்களை உடனுக்குடன் சரி செய்யாமல், ஆழ்குழாய் கிணறு பராமரிப்பு ஒப்பந்ததாரர்கள் பெரும் குளறுபடிகளை செய்து வருவதால், உப்பு நீர் விநியோகத்தில் பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உப்புநீர் குழாய்கள் பழுதடைந்து பல நாட்கள், மாதங்கள் ஆனாலும், மேற்கண்ட ஒப்பந்ததாரர்களால், பழுது சரி செய்யப்படுவதில்லை.

இதனால் பொதுமக்களுக்கு உப்பு நீர் விநியோகம் சரியான முறையில் கிடைக்காமல், அன்றாடப் பயன்பாட்டிற்கு கூட உப்பு நீர் இல்லாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உதவியோடு உப்புநீர் விநியோக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாமலேயே, மக்களின் வரிப்பணம் கொள்ளையடிக்கப்படுகிறது.

பொதுமக்களின் அன்றாடப் பயன்பாட்டிற்கான உப்பு நீர் விநியோகத்தில், கோவை மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து கவனக்குறைவாக அலட்சியப்போக்கையே கடைப்பிடித்து வருகிறது. இந்த உப்பு நீர் பிரச்சினை தொடர்பாக பொதுமக்களையும் அழைத்துக்கொண்டு , நேரில் சென்று நூற்றுக்கணக்கான முறை, மாநகராட்சி ஆணையாளர், உதவி ஆணையாளர், உதவி பொறியாளர் ஆகியோரை தொடர்பு கொண்டு பேசியும், கடிதங்கள் கொடுத்தும், பல இடங்களில் உப்பு நீர் விநியோகம் இதுவரை சீர் செய்யப்படவில்லை.

மேலும், மாநகராட்சியின் சில பகுதிகளில் அதிமுக வினர் , மேற்கண்ட உப்பு நீர் ஒப்பந்ததாரர்கள் துணையோடு உப்புநீர் குழாய் இணைப்புக்கு ஒரு வீட்டுக்கு ரூ.10,000 பெற்றுக்கொண்டு சட்டவிரோதமாக, இணைப்பு வழங்கி முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக தெரிய வருகிறது. மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்றி தராமல் , முறைகேடுகள் செய்து, இணைப்பு வழங்கி, இதிலும் கூட ஏழை எளிய மக்களிடம் அதிமுக வினர் கொள்ளையடித்து வருகின்றனர். இந்த முறைகேடு செய்யும் விஷயங்களில் தலைமை எவ்வழியோ, தாங்களும் அவ்வழியே என்று உப்பு நீர் குழாய் இணைப்பு கொடுப்பதில் கூட ஊழல் முறைகேடுகளில் அ.தி.மு.கவினர் திளைத்து வருகின்றனர்.

இந்த உப்பு நீர் விநியோக பிரச்சினை குறித்தும், அதனால் பொதுமக்கள் படும் சிரமம் குறித்தும், வார்டுகளில் உப்பு நீர் குழாய் இணைப்பு வழங்குவதில் நடைபெறும் முறைகேடுகள் குறித்தும், எவ்வித கவலையுமின்றி, எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இதே மாநகரத்தில் வசித்து வருகிறார். பொதுமக்களுக்கு அன்றாட பயன்பாட்டிற்கு கூட, பல இடங்களில் உப்பு நீர் கொடுக்க முடியாத அவல நிலையில் தமிழக உள்ளாட்சித் துறை உள்ளது.

ஆகவே, பொதுமக்களின் நலன் கருதி கோவை மாநகராட்சி பகுதிகளில் உப்பு நீர் விநியோகம் சீரான முறையில், காலந்தாழ்த்தாமல் வழங்கவும், சரியான முறையில் தங்களது பராமரிப்புப் பணிகளை செய்யாத ஆழ்குழாய் கிணறு பராமரிக்கும் ஒப்பந்ததாரர்கள் மீது கோவை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories