டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அசோக் நகர் 10வது அவென்யூ பகுதியில் உள்ள குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் பெருமாள் (70). இவர் மரக்கடையில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை பெருமாள், அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும், பெருமாளின் சட்டைப்பையில் இருந்து கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது. இரண்டு பக்கங்கள் கொண்ட அந்தக் கடிதத்தில், விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக தற்கொலை செய்து கொள்வதாக பெருமாள் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விவசாயிகள் போராட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் அந்தத் தற்கொலை கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார் பெருமாள். அந்தக் கடிதத்தை கைப்பற்றிய போலிஸார், பெருமாளின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையைச் சேர்ந்த தொழிலாளி கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வி.சி.க தலைவர் திருமாவளவன், “வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையைச் சேர்ந்த பெருமாள் தனது உயிரை மாய்த்துக் கொண்டார் என்பது மிகுந்த வேதனையளிக்கிறது. உழைக்கும் மக்களின் உணர்வுகளைப் பற்றிக் கவலைப்படாத மோடி அரசு பெருமாளின் மரணத்தால் வெட்கமின்றி அசையாமல் இருக்கும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.