தமிழ்நாடு

பொங்கல் பரிசு: தேர்தல் பரப்புரையின் போது அறிவித்தது ஏன்? வாக்குகளுக்கான முன்பணமா? - திருமாவளவன் கேள்வி

பொங்கல் பரிசு அறிவித்திருப்பது கவனத்தைத் திசைதிருப்பும் ஏமாற்று வேலையாகும். எனவே, புயல்-மழை வெள்ள நிவாரணத்தை உடனே அறிவிக்கவேண்டுமெனத் தமிழக முதல்வரை வலியுறுத்துகிறோம்.

பொங்கல் பரிசு: தேர்தல் பரப்புரையின் போது அறிவித்தது ஏன்? வாக்குகளுக்கான முன்பணமா? - திருமாவளவன் கேள்வி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புயல்-மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் என்ன ஆனது குறித்து உரிய விளக்கமளிக்குமாறு தமிழக முதல்வருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “அதிமுகவின் சார்பில் தேர்தல் பரப்புரையைத் துவக்கிய எடப்பாடி பழனிச்சாமி, தமிழக மக்களுக்கு வழக்கத்திற்கு மாறான அளவில் பொங்கல் பரிசு ரூ.2500/- வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். ஒரு முதல்வராக செய்ய வேண்டிய அறிவிப்பை ஒரு கட்சியின் தேர்தல் பரப்புரையில் செய்வது முறையா? இது அப்பட்டமான விதிமீறலாகும். இது மக்களுக்கான நலத் திட்டமா? அல்லது வாக்குகளுக்காக வழங்கப்படும் முன்பணமா? என்று மக்களிடையே கேள்வி எழுந்துள்ளது.

புயலாலும் மழை வெள்ளத்தாலும் பாதிப்புக்கு ஆளாகி இலட்சக் கணக்கான மக்கள் பரிதவித்துக் கொண்டிருக்கிற நேரத்தில், அவர்களுக்கு எந்த நிவாரணத்தையும் அறிவிக்காமல் பொங்கல் பரிசு அறிவித்திருப்பது கவனத்தைத் திசைதிருப்பும் ஏமாற்று வேலையாகும். எனவே, புயல்-மழை வெள்ள நிவாரணத்தை உடனே அறிவிக்கவேண்டுமெனத் தமிழக முதல்வரை வலியுறுத்துகிறோம்.

நிவர் மற்றும் புரெவி புயல்களாலும் அதனையொட்டிப் பெய்த பெருமழை வெள்ளத்தாலும் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இலட்சக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் முற்றாக அழிந்து போயிருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன. தோட்டப் பயிர்களும் ஏராளமாக நாசமாகி இருக்கின்றன. இந்த மழை வெள்ள சேதத்தை பார்வையிடுவதற்காக வருகைதந்த மத்திய குழு, மத்திய அரசிடம் என்ன பரிந்துரை செய்தது? அதனடிப்படையில் மத்திய அரசு இதுவரை ஏன் பேரிடர் நிவாரண நிதியை தமிழகத்திற்கு வழங்கவில்லை? அதைப் பெறுவதற்கு தமிழக அரசின் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மக்களுக்கு விளக்க வேண்டும்

மத்திய அரசின் பேரிடர் மேலாண்மைத் துறையானது, ஒவ்வொரு மாநில அரசும் பேரிடர் பாதிப்பு ஏற்பட்டால் என்னென்ன நிவாரண நடவடிக்கைகளை எடுக்கவேண்டும், மக்களுக்கு ஏற்படும் இழப்பு ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு இழப்பீடு வழங்கவேண்டும் என்பதை ஒரு ஆணையின் மூலம் வரையறுத்திருக்கிறது. இதற்கென உள்துறை அமைச்சகம் 2015 ஏப்ரல் 8 ஆம் தேதியிட்டு ஒரு ஆணையைப் பிறப்பித்துள்ளது ( No 32-7/2014- NDM -1 )கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வைக் கவனத்தில்கொண்டு இந்த நிவாரணத் தொகைகள் உயர்த்தப்படவேண்டும்.

இதனடிப்படையில், வெள்ளத்தால் சேதமடைந்த நெற்பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 30 ஆயிரமும், மற்ற பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்க வேண்டும். அத்துடன், புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் பத்தாயிரம் ரூபாயும் மற்ற பகுதிகளில் வாழ்வோர் அனைவருக்கும் குடும்பத்துக்கு ஐந்தாயிரம் ரூபாயும் இழப்பீடாக வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மத்தியில் ஆளும் பாஜக அரசு, புயல் வெள்ள நிவாரண நிதியைப் போதிய அளவில் தமிழகத்துக்கு உடனே விடுவிக்கவேண்டும். அதற்காகத் தமிழக அரசு தனது கூட்டாளியான பாஜக அரசுக்கு உரிய அழுத்தத்தைத் தரவேண்டுமென விசிக சார்பில் வலியுறுத்துகிறோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories