நிவர் புயல் அதி தீவிரமாக வலுப்பெறும் எனக் கூறியுள்ளார் சென்னை வானிலை மையம் இயக்குநர் பாலச்சந்திரன். நிவர் புயலின் தீவிரம் குறித்து எச்சரிக்கும் வகையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் கூறியதன் விவரம் பின் வருமாறு:-
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 520 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து புயலாகவும் நாளை தீவிர புயலாக வலுப்பெற்று இது வடமேற்கு திசையில் நகர்ந்து வலு பெறக்கூடும்.
தற்போதைய நிலவரப்படி எதிர்வரும் 25ஆம் தேதி பிற்பகலில் காரைக்காலுக்கும் மாமல்லபுரத்துக்கு இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் நாளை முதல் 26ம் தேதி வரை மழை பெய்யக்கூடும்.
கானமழையை பொறுத்தவரையில் 24 ,25ம் தேதிகளில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிக மழையும் , ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும் .
காற்றின் வேகத்தை பொறுத்தவரையில் 24, 25 தேதிகளில் வட கடலோர மாவட்டங்களில் நாளை முதல் பலத்த காற்று 55 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். புயல் கரையை கடக்கும் சமயங்களில் பலத்த காற்று மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் சமயங்களில் 120 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
கடல் நிலையைப் பொறுத்தவரையில் 24 ,25 தேதிகளில் தமிழக கடற்கரை பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். கடலலைகள் இயல்பை விட சுமார் இரண்டு மீட்டர் உயரம் வரை உயர்ந்து காணப்படும்.
மீனவர்கள் வரும் 25-ஆம் தேதி வரை தமிழக கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் 24 ,25 தேதிகளில் நகரின் சில பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
மழை நிலவரம்...
நாளை (24-11-2020) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கன மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும் பெய்யக்கூடும்.
மேலும் வேலூர்,ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் . ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நாளை மறுநாள் (25-11-2020) நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ,திருவண்ணாமலை ,மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதி கன மழையும், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், செங்கல்பட்டு ,காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழைக்கும் வாய்ப்புள்ளது.
அதேபோல ஈரோடு, சேலம், நாமக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
(26-11-2020) வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய வட மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.
(27-11-2020) தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.