சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை அடுத்த பாலவாக்கம் குப்பம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி சுகித்தா. இவர் கடந்த 2018ம் ஆண்டு பூஜை செய்தபோது விளக்கில் தீப்பிடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்நிலையில், சிவக்குமார் நீலாங்கரை குற்றப்பிரிவு போலிஸாரிடம் புகார் செய்தார். அதில், மனைவி இறந்த பின் வீட்டில் குடும்பத்தினருடன் துக்கத்தில் இருந்தோம். அப்போது உறவினர் பெண் ரேவதி என்பவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
பாலவாக்கத்தில் உள்ள மகள் வீட்டிற்கு பெரும்பாக்கம் 8 அடுக்கு பகுதியை சேர்ந்த நாராயணி (45) என்பவர் வந்திருந்தார். ரேவதி வீட்டிற்கு வந்த நாராயணி சாமி வந்து அருள் வாக்கு கூறி எலுமிச்சை பழம் தந்து விபூதி தந்தார். இதில் ரேவதிக்கு குணமடைந்தார்.
அப்போது என்னிடமும் உறவினர்களிடமும் உங்கள் உயிர் பலி கேட்டு ஏவல், பில்லி, சூன்யம் வைத்து இருக்கிறார்கள். இதை போக்க நகைகளை வைத்து பரிகாரம் செய்ய வேண்டும். இதற்கு செலவு ஆகும் என்றார்.
இதையடுத்து கடந்த 2018ம் ஆண்டு என்னிடம் மற்றும் உறவினர்களிடம் இருந்து 45 நாள் பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறி 102 பவுன் தங்க நகைகளும் பரிகார செலவுக்கு என்று ரூ.8 லட்சத்தி 75 ஆயிரம் வரை பணத்தை வாங்கி சென்றார்.
45 நாள் முடிந்துவிட்டு நகை பணத்தை கேட்க சென்றபோது 365 நாள் வரை பூஜை செய்ததால் தான் பரிகாரம் முடியும். இல்லை என்றால் அனைவரது உயிருக்கும் ஆபத்து ஏற்படும் என்று கூறினார். நகைகளை கேட்க ஆரம்பித்தவுடன் நாராயணி திடீரென தலைமறைவாகி விட்டார்.
அடையாறு காவல் துணை கமிஷனர் விக்ரமன் உத்தரவின் பேரில், நீலாங்கரை போலிஸார் வழக்கு பதிவு செய்தனர். குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெரி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தமிழன்பன், ஏட்டுகள் பிரதீப்குமார், இன்பராஜ் கொண்ட தனிப்படையினர் நாராயணியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் ஒராண்டுக்கு பின் பெரும்பாக்கத்தில் நாராயணி இருப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலிஸார் விரைந்து சென்று நாராயணியை கைது செய்தனர். விசாரணையில் நகைகளை பாலவாக்கத்தில் உள்ள ரத்தன்லால் என்பவது அடகு கடையில் விற்று தனது இரண்டாவது மகளுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்துவைத்ததாக கூறினார்.
இதனையடுத்து திருட்டு நகைகள் வாங்கிய ரத்தன்லால் மற்றும் ஹேம்நாத் ஆகிய இருவரை பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் வாங்கிய நகைகளை பெரும்பாலும் உருக்கி விற்றுவிட்டதாக தெரிவித்தனர், திருட்டு் நகைகளை வாங்கிய குற்றத்திற்காக தந்தை, மகன் இருவரையும் கைது செய்தனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட நாராயணி மற்றும் திருட்டு நகைகளை வாங்கிய குற்றத்திற்காக பாலவாக்கத்தில் அடகு கடை நடத்திவரும் ரத்தினலால் மற்றும் அவரது மகன் ஹேம்நாந் ஆகிய 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.