தி.மு.க இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை சென்னையில் சந்தித்த நிலையில், காடுவெட்டி குருவின் மகனும், மாவீரன் மஞ்சள் படையின் தலைவருமான கனலரசன் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது கனலரசன் அளித்த பேட்டியில், “தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினிடம் வன்னியர்களுக்கு 20 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக கோரிக்கை விடுத்தோம். கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தலைமையுடன் பேசி நல்ல முடிவு எடுப்பதாக தெரிவித்தார்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் மாவீரன் மஞ்சள் படை தி.மு.கவிற்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்யும். தி.மு.க ஆட்சிகாலத்தில் தலைவர் கலைஞர் 108 சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தார். அதே போன்று தற்போது வன்னியர்களுக்கு 20 சதவீத உள் ஒதுக்கீட்டை தி.மு.க பெற்றுத் தரும் என நம்புகிறோம்.” எனத் தெரிவித்தார்.