தமிழ்நாடு

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்.. நாளை 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்.. நாளை 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் நேற்று நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்றுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வட தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்.. நாளை 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

மேலும் நேற்று மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்றுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.

இதன் காரணமாக அக்டோபர் 15 வரை குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அக்டோபர் 14 வரை அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அக்டோபர் 11 மத்திய மேற்கு வங்க கடல் பகுதி, வட மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தென் மேற்கு வங்க கடல் மற்றும் ஆந்திரா , ஒடிசா கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அக்டோபர் 12 மத்திய மேற்கு, வட மேற்கு, தென் மேற்கு வங்க கடல் பகுதி, மற்றும் ஒடிசா கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50-60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இடையிடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அக்டோபர் 12 ஆந்திரா கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50-65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் , இடையிடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆகையால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

கடல் உயர் அலை முன்னறிவிப்பு:

தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 12.10.2020 இரவு 11:30 மணி வரை கடல் அலைகளின் உயரம் 3.0 முதல் 3.7 மீட்டர்வரையிலும் , வட தமழக கடலோரம் கலிமார் முதல் புலிக்காட் வரை கடல் அலைகளின் உயரம் 3.0 முதல் 3.3 எழும்பக்கூடும்.

banner

Related Stories

Related Stories