தமிழ்நாடு

“பெண்களுக்கு எதிரான குற்றம் செய்வோரை அ.தி.மு.க, பா.ஜ.க அரசுகள் காப்பது ஏன்?” - மகளிர் அமைப்புகள் கேள்வி!

கிஷோர் கே சுவாமி என்ற கீழ்த்தரமான நபர் மீது பதிவு செய்யப்பட்டிருக்கும் எல்லா புகார்களையும் உடனடியாக காவல்துறை கவனத்தில் எடுத்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாதர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

“பெண்களுக்கு எதிரான குற்றம் செய்வோரை அ.தி.மு.க, பா.ஜ.க அரசுகள் காப்பது ஏன்?” - மகளிர் அமைப்புகள் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பெண்களுக்கு எதிரான குற்றம் செய்பவர்களைத் தண்டிக்காமல் அ.தி.மு.க அரசும், பா.ஜ.க-வும் காப்பது ஏன்? என மகளிர் அமைப்புகள் கேள்வி எழுப்பியுள்ளன.

இதுதொடர்பாக இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநிலச் செயலாளர் ஜி.மஞ்சுளா வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமூக ஊடங்களில் கிஷோர் கே சுவாமி என்கிற பேரில் வலம் வரும் நபர் வலதுசாரி அரசியல் பேசுபவர்களிடையே பிரபலமானவர். கடந்த சில வருடங்களாகவே பொதுவெளியில் இயங்கும் பெண்கள் குறித்து ஆபாசமாக அருவருப்பாக பதிவு செய்து வருகிறார். 2013 தொடங்கி மிகச் சமீப காலம் வரையில் தொடர்ச்சியாக பெண்களை இழிவுபடுத்தி இவர் எழுதிய பதிவுகள் மீது இதுவரை எந்த பெரிய நடவடிக்கையும் இல்லை.

பெண் பத்திரிகையாளர்களை மிரட்டும் தொனியில் அவதூறாக கொச்சையாக எழுதும் கிஷோர் கே சுவாமி மீது கிட்டத்தட்ட பத்து புகார்கள் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தரப்பட்டிருக்கின்றன. இதில் இரண்டு புகார்கள் மீது மட்டும் காவல்துறை நடவடிக்கை எடுத்தது. ஆனால் கைதாகி சில மணி நேரங்களிலேயே விடுவிக்கப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கையும் கண்துடைப்பு நடவடிக்கையாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.

“பெண்களுக்கு எதிரான குற்றம் செய்வோரை அ.தி.மு.க, பா.ஜ.க அரசுகள் காப்பது ஏன்?” - மகளிர் அமைப்புகள் கேள்வி!

மத்திய, மாநில ஆளும் கட்சிகளுக்கு நெருக்கமாக இருப்பதால் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க தலைவர்களின் அழுத்தம் காரணமாகவே இத்தனை புகார்களுக்கு இடையிலும் கிஷோர் பாதுகாக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக ஜூலை 29ம் தேதி நிகழ்ந்த கைது நடவடிக்கைக்குப் பிறகு பா.ஜ.க தலைவர் எச்.ராஜா கிஷோருக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவு செய்ததும் இதை உறுதி செய்கிறது.

சமீபத்தில் ஏ.பி.வி.பி-யின் தேசிய தலைவர் பொறுப்பில் இருக்கும் சுப்பையா என்பவரும் அவரது வீட்டருகில் வசிக்கும் ஒரு முதிய பெண்ணின் வீடு முன்பாக சிறுநீர் கழிப்பது தகாத வார்த்தை பேசுவது போன்ற தொல்லைகள் தந்து அவர்மீது புகார் அளிக்கப்பட்ட போது பா.ஜ.க தலைவர்கள் அவரையும் காப்பாற்ற முயற்சி எடுத்தார்கள்.

பெண் பாதுகாப்பு பெண் நலம் என்று பேசும் இக்கட்சிகள் தொடர்ச்சியாக பெண்களை தரக்குறைவாக அவதூறாக பேசும் நபருக்கு பாதுகாப்பு அளித்து அவரை வெளிப்படையாக ஆதரிப்பது ஏன்? பெண்களை பற்றி தொடர்ந்து அவதூறு பேசி அதற்காக சட்ட நடவடிக்கையை சந்தித்துக் கொண்டிருக்கும் கிஷோர் போன்ற நபர்களுக்கு ஆதரவளிப்பதன் மூலம் பா.ஜ.க அ.தி.மு.க போன்ற கட்சிகள் சொல்லும் செய்தி என்ன?

“பெண்களுக்கு எதிரான குற்றம் செய்வோரை அ.தி.மு.க, பா.ஜ.க அரசுகள் காப்பது ஏன்?” - மகளிர் அமைப்புகள் கேள்வி!

சமூகத்தில் பெண் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டிய காவல்துறை சட்டரீதியாக செயல்படாமல் ஏன் அழுத்தத்திற்கு அடிபணிகிறது? பெண்களுக்கு எதிரான சிந்தனைகளுக்கு ஆதரவளிக்கும் கட்சிகளாக இன்று பொதுவெளியில் அடையாளம் காணப்பட்டிருக்கும் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.கவில் உள்ள பெண் தலைவர்களின் நிலைப்பாடு என்ன? என்ற கேள்விகளை இந்திய மாதர் தேசிய சம்மேளனம் முன்வைக்கிறது.

கிஷோர் கே சுவாமி போன்ற ஒரு கீழ்த்தரமான நபர் மீது பதிவு செய்யப்பட்டிருக்கும் எல்லா புகார்களையும் உடனடியாக காவல்துறை கவனத்தில் எடுத்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். கருத்துரிமை என்ற பெயரில் பெண்களை கொச்சைபடுத்தும் பதிவுகள், பிரச்சாரங்களை காக்க முற்படுவது சமூகவெளியில் பெண்கள் வெளியே வருவதற்கு உள்ள வாய்ப்பை உரிமையை மறுக்கும் செயலாகும்.

கிஷோர் சுவாமி போன்ற நபர்களை பாதுகாக்கும் பா.ஜ.கவிற்கு கடும் கண்டங்களை தெரிவிப்பதோடு இதுபோன்ற குற்றச் செயல்கள் புரிபவர் மீது உரிய நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்பதையும் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் வலியுறுத்துகிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக ஜனநாயக மாதர் சங்கம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “தமிழகத்தில் இந்த ஊரடங்கு காலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் மீதான வன்முறைகள் அசுர வேகத்தில் அதிகரித்து வந்து கொண்டிருக்கின்றன. பெண்களும் , குழந்தைகளும் படுகொலை செய்யப்பட்ட போதும், ஆணவப்படுகொலை செய்யப்பட்ட போதும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டபோதும் வாய் திறக்காமல் மௌனம் காத்த தமிழக அமைச்சர்கள் பெண்களை இழிவாக பதிவிடும் குற்றவாளியை விடுவிக்க இத்தனை முயற்சிகள் எடுத்ததன் நோக்கம் என்ன?

பெண்களின் மீதான வன்முறைகளை தடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ள தமிழக அமைச்சர்கள் பெண்கள் மீது வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளியை பாதுகாக்க முயற்சித்த கொடும் செயலை ஜனநாயக மாதர் சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது.

சைபர் கிரைம் குற்றத்தடுப்புப் பிரிவு பிணையில் வெளிவர முடியாத குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டும் அக்குற்றவாளியை விடுவித்ததன் உள் நோக்கம் என்ன?

பல ஆண்டு காலமாக பெண்கள் மீது இத்தகைய வன்முறைகளை பிரயோகிக்கும் நபருக்கு தமிழக அரசும், காவல்துறையும் வக்காளத்து வாங்க வேண்டிய அவசியமென்ன? காவல் துறையின் இத்தகைய செயல்களால் தமிழகத்தில் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரிக்குமே ஒழிய குறையாது.

ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.கவினர் சிலர் அனுதினமும் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பெண்களை கொச்சைப்படுத்தி பேசுவதும், பதிவிடுவதும் காவல்துறையில் இத்தகைய செயல்பாட்டால் தான் என்பதை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.கவின் நலன் காக்க தமிழக பெண்கள் நலனை பலிகொடுக்க ஜனநாயக மாதர் சங்கம் ஒரு போதும் அனுமதிக்காது.

எனவே தமிழக காவல்துறை கிஷோர் கே சாமியை உடனடியாக கைது செய்து குற்றவாளிக்கு உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்துகிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories