தமிழ்நாடு

"கர்ப்பிணிக்கு உதவியதற்கு அபராதம்" - விரக்தியடைந்த மதுரை ஆட்டோ ஓட்டுநர்

"கர்ப்பிணிக்கு உதவியதற்கு  அபராதம்" - விரக்தியடைந்த மதுரை ஆட்டோ ஓட்டுநர்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மதுரையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முத்துகிருஷணன். மதுரையில் ஊரடங்கு நீடிப்பதால், இவருக்கு பணியில்லை. இப்படிப்பட்ட சூழலில், அக்கம் பக்கத்தாரின் மருத்துவ தேவைக்கு மட்டும் வாகனம் இயக்கி வந்திருக்கிறார்.

அந்த வகையில் பிரசவத்துக்காக பெண் ஒருவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட்டுவிட்டு, திரும்பிக் கொண்டிருக்கும் போது, கோரிப்பாளையத்தில் ஆட்டோவை போலிஸார் மடக்கியுள்ளனர்.

பிரசவத்திற்காக இறக்கி விட்டு வருவதாக முத்துகிருஷ்ணன் எவ்வளவோ கூறியும், கேட்காத போலிஸார், அவருக்கு 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இதற்கு முன்னரும் இப்படி ஒரு மருத்துவ சவாரி முடித்துவிட்டு வரும்போதும், 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். ஆக மொத்தம் ஒரே வாரத்தில் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் மனஉளைச்சல் அடைந்த முத்துகிருஷ்ணன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் " ஆம்புலன்ஸ் வர முடியாததால் பிரசவத்திற்காக ஆட்டோ ஓட்டி உதவுறோம். பிரசவம் என்பதால நான் பணம் கூட வாங்கல. நான் என்ன சொல்றேங்குறத கேட்காம அபராதம் போட்டுட்டாங்க. வருமானம் இல்லாத சூழல். அரசாங்கம் மொத்தம் கொடுத்ததே 1000 ரூபாய் தான். அப்படி கொடுத்துட்டு இந்த பக்கம் அதை பிடுங்கிடுறாங்க. வருமானமே இல்லாத நேரத்துல 500 ரூபாய் அபராதம் போடுறாங்க. ஒரு மனசாட்சி வேணாமா. நாங்க என்ன சும்மாவா ஊர் சுத்துறோம். மக்களோட அவசர தேவைக்கு தான் வண்டி ஓட்டுறோம். ரொம்ப மன வேதனையா இருக்கு. " என விரக்தியின் உச்சத்தில் பேசியுள்ளார்.

ஆட்டோ ஓட்டுநரின் வீடியோ வைரலானதை அடுத்து, மதுரை போக்குவரத்து காவல்துறை, அவருக்கு விதித்த அபராதத்தை ரத்து செய்துள்ளது.

banner

Related Stories

Related Stories