திருப்பூர் மாநகராட்சியில் பெண் தூய்மை பணியாளர் ஒருவர் தனது குழந்தையை, குப்பை எடுத்துச் செல்லும் கூடையில் அமர வைத்து பணி செய்து வந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சுஜா என்ற அந்த பெண், திருப்பூரில் தூய்மை பணியாளராக பணி செய்து வருகிறார். இவருடைய 3 வயது மகளை கவனித்துக் கொள்ள ஆளில்லாததால், தன்னுடனேயே அழைத்துச் சென்றுள்ளார். குப்பைகளை சேகரிக்கும் தள்ளு வண்டியில் உள்ளை பிளாஸ்டிக் கூடையில் குழந்தையை அமர வைத்து பணியை மேற்கொண்டுள்ளார்.
இந்த காட்சி காண்போரின் மனதை கனக்கச் செய்துள்ளது. கொரோனா காலத்தில் துப்புரவு பணியாளர்களை பெயரளவில் மட்டுமே போற்றும் அரசு, உண்மையில் அவர்களுக்கான அடிப்படை வசதிகளையும், பாதுகாப்பு தேவைகளையும் ஏற்படுத்தி தருவதில்லை.
புகைப்படத்தில் காணப்படும் சுஜா, மாஸ்க், கையுரை போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் இல்லாமல் பணி செய்து வருகிறார். குழந்தையும் குப்பையில் அமர்ந்திருக்கிறது. தூய்மை பணியாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும், போதிய பாதுகாப்பு செய்து தராத திருப்பூர் மாநகராட்சிக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.