தமிழ்நாடு

“இந்த அரசிடமிருந்து நமக்கு நீதி கிடைக்கப்போகிறதா?” - முதல்வர்,அமைச்சரின் பேச்சால் கனிமொழி எம்.பி காட்டம்!

சாத்தான்குளம் பென்னிக்ஸ், ஜெயராஜ் லாக்-அப் மரணம் குறித்து முதல்வரும், அமைச்சரும் விளக்கம் கொடுப்பதைப்பார்க்கும்போது நீதி கிடைக்கும் என நம்ப முடியாது என கனிமொழி எம்.பி., விமர்சித்துள்ளார்.

“இந்த அரசிடமிருந்து நமக்கு நீதி கிடைக்கப்போகிறதா?” - முதல்வர்,அமைச்சரின் பேச்சால் கனிமொழி எம்.பி காட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சாத்தான்குளம் பென்னிக்ஸ், ஜெயராஜ் லாக்-அப் மரணம் குறித்து முதல்வரும், அமைச்சரும் விளக்கம் கொடுப்பதைப்பார்க்கும்போது நீதி கிடைக்கும் என நம்ப முடியாது என கனிமொழி எம்.பி., விமர்சித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலிஸாரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு, கடுமையாகத் தாக்கப்பட்டதில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தப் படுகொலையைக் கண்டித்தும், பாதிக்கப்பட்டோருக்கு நீதி கோரியும் எதிர்க்கட்சிகள், பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. மாநில மனித உரிமை ஆணையமும் இவ்விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

“இந்த அரசிடமிருந்து நமக்கு நீதி கிடைக்கப்போகிறதா?” - முதல்வர்,அமைச்சரின் பேச்சால் கனிமொழி எம்.பி காட்டம்!

இந்நிலையில் இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் கடம்பூர் ராஜு, “காவல்நிலையத்திலேயே தாக்கப்பட்டு அங்கேயே உயிரிழந்ததால் தான் அதற்கு லாப் மரணம் என்று பெயர்.

ஆனால் தற்போது நடந்த சம்பவம் காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டு, அங்கிருந்து மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு, கிளைச்சிறையில் அடைக்கப்பட்டு 2, 3 நாட்களுக்குப் பின்னர் நடந்துள்ளது. இதை லாக்கப் மரணம் எனச் சொல்ல முடியாது” எனக் கூறினார்.

அமைச்சரின் இந்தக் கருத்தை தூத்துக்குடி மக்களவைத் தொகுதி தி.மு.க எம்.பி கனிமொழி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது :

“சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் மூச்சுத்திணறலாலும், உடல்நலக் குறைவாலும் உயிரிழந்தனர் என்று உடற்கூராய்வு அறிக்கை வெளிவரும் முன்னரே முதல்வர் கூறினார். தற்போது தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் இது லாக்-அப் மரணம் கிடையாது என்று கூறுகிறார்.

இந்த அரசிடமிருந்து, கொலையாளிகள் தண்டிக்கப்பட்டு நமக்கு நீதி கிடைக்கும் என்று எப்படி நம்ப முடியும்? முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையை காப்பாற்றுவதற்கு முயற்சிப்பது வெளிப்படையாகத் தெரிகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories