கொரோனாவை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் வேலையிழந்த விரக்தியில் இளம் பொறியாளர் ஒருவர், தண்ணீர் தொட்டியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள கோம்பை சாலை பகுதியைச் சேர்ந்தவர் பசுபதி. இவரது பேரன் அசோக்குமார் (28) பொறியியக் பட்டதாரி. இவரது பெற்றோர் கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்றதால் , சிறு வயது முதல் பாட்டி வீட்டிலிருந்து அசோக்குமார் படித்து வந்தார்.
அசோக் குமார் படிப்பு முடித்தவுடன் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தார். கொரோனா ஊரடங்கால் அவர் பணிபுரிந்த நிறுவனம் மூடப்பட்டதால், 2 மாதத்திற்கு முன் அசோக்குமார் ஊருக்கு வந்த நிலையில், வேலையிழந்துள்ளார்.
பல இடங்களில் வேலை தேடியும் கிடைக்கவில்லை. இதனால், விரக்தியடைந்த அசோக்குமார் நேற்று அதிகாலை அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி மேலே ஏறி அங்கிருந்து குதித்தார். இதில் அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிஸார், அசோக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.