
திருப்பத்தூர் மாவட்டம் சுந்தரம்பள்ளி பகுதியை சேர்ந்த ஆதவன் என்பவர், தனது விவசாய நிலத்தை சமன் செய்ய எண்ணி, அதற்கான பணிகளை JCB இயந்திரம் மூலம் மேற்கொண்டுள்ளார். அப்போது அங்கே பழங்காலத்து குடுவை ஒன்றை கண்டெடுத்துள்ளார். தொடர்ந்து அந்த குடுவையை திறந்து பார்க்கையில், அதில் சுமார் 86 தங்க நாணயங்கள் இருந்துள்ளன.

இதைத்தொடர்ந்து இதுகுறித்து ஊர் முழுக்க தகவல் பரவவே, தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு திருப்பத்தூா் வட்டாட்சியர் நவநீதம் மற்றும் வருவாய்த் துறையினர் விரைந்து ஆதவனிடம் இருந்து அந்த நாணயங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
இது குறித்து வட்டாட்சியா் கூறுகையில், "மீட்கப்பட்ட நாணயங்கள் தங்கம் என்று இன்னும் உறுதியாகவில்லை. தொல்லியல் துறை ஆய்வுக்குப் பிறகு தான் அது உறுதி செய்யப்படும். மேலும் தற்போது திருப்பத்தூர் கருவூலத்தில் ஒப்படைக்கப்படும்" என்றார்.

1878-ம் ஆண்டு இந்திய புதையல் (Treasure Trove) சட்டத்தின்படி, ஒருவரின் சொந்த நிலத்தில் புதையல் கிடைத்தால் அதனை உடனடியாக அருகில் இருக்கும் காவல் நிலையத்திலோ அல்லது மாவட்ட ஆட்சியரிடமோ ஒப்படைக்க வேண்டும். மாறாக அதனை அரசுக்கு தெரிவிக்காமல் மறைத்து வைத்தாலோ, விற்றாலோ அது சட்டப்படி குற்றமாகும்.
மேலும் நிலம் யாருக்கு சொந்தமானாலும் சரி, அதில் கிடைக்கும் புதையலுக்கு உரிமை கோரும் உண்மையான வாரிசுகள் யாரும் முன்வராத நிலைமையில் மட்டுமே, அந்த உரிமை முழுமையாக நில உரிமையாளருக்கு சென்று சேரும்.
அதோடு ஒருவரின் நிலத்தில் வேறொருவர் புதையலைக் கண்டுபிடித்தால், புதையலின் 50% நில உரிமையாளருக்கும், மீதமான 50% அதை கண்டுபிடித்த நபருக்கும் வழங்கப்படும் என்று சட்டம் கூறுகிறது. அதுமட்டுமில்லாமல் அரசு நிலத்தில் யாரேனும் புதையலை கண்டுபிடித்தால் அது முழுமையாக அரசுக்கு மட்டுமே சொந்தம் என்றும் சட்டம் குறிப்பிடுகிறது.






