தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,520 ஆக உள்ளது.
இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் இன்றளவில் 41,710 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்றும், இன்றைக்கான 6,109ல் 43 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளது. புதுக்கோட்டையில் முதல் முதலாக ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “இரண்டு பேர் இன்று உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. மேலும், குணமடைந்தோர் எண்ணிக்கை 457 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 46 பேர் குணமடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் மட்டும் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் சோதனை செய்ததில் தமிழகத்தில் கொரோனா தொற்று சமூக அளவில் பரவவில்லை.
கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும்போது மக்கள் தடுத்து நிறுத்தக் கூடாது. அவ்வாறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்தார்.