தமிழ்நாடு

இலவச வேட்டி,சேலை திட்டத்தில் மாபெரும் ஊழல் : லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!

இலவச வேட்டி, சேலை திட்டத்தில் 21.31 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்தது தொடர்பாக கைத்தறித் துறை அதிகாரிகளுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை உரிய விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலவச வேட்டி,சேலை திட்டத்தில் மாபெரும் ஊழல் : லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஏழை எளிய மக்களுக்கு ஒரு கோடியே 25 லட்சம் இலவச வேட்டி - சேலை உற்பத்தி செய்வதற்கான நூல்களை, தமிழக கைத்தறி மற்றும் ஜவுளித்துறை கொள்முதல் செய்து, நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கியுள்ளது. இதில் ஒரு சேலைக்கு, 260 ரூபாய் கூலியாக வழங்கப்படுகிறது.

இந்நிலையில், தரம் குறைந்த நூல்களை அதிக விலைக்கு கொள்முதல் செய்ததன் மூலம், 21 கோடியே 31 லட்சத்து 21 ஆயிரத்து 250 ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி உள்ளதாகக் கூறி, திருப்பூரை சேர்ந்த முத்தூர் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் கோவிந்தராஜ் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ஒரு நாளைக்கு 6 சேலைகள் நெய்யப்படும் நிலையில், தரம் குறைந்த நூல்களை நெய்வதற்கு வழங்கியதால் ஒரு நாளைக்கு 3 சேலைகளை மட்டுமே நெய்வதால் தங்கள் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது எனக் கூறியுள்ளார்.

இலவச வேட்டி,சேலை திட்டத்தில் மாபெரும் ஊழல் : லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!

தரம் குறைந்த நூல்களை, அதிக விலைக்கு கொள்முதல் செய்ததன் மூலம், அரசுக்கு 21.31 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியது தொடர்பாக, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநருக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும், தங்கள் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநருக்கு உத்தரவிடவும் கோரியுள்ளார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி மனுதாரர் கொடுத்த மனு மீது லஞ்ச ஒழிப்புத்துறை மூன்று மாதத்திற்குள் உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

banner

Related Stories

Related Stories