தமிழ்நாடு

”ஜனநாயக நாட்டில் ஊடகங்கள் மீது தாக்குதல் நடத்துவதா?”: எடப்பாடி அரசிற்கு தி.மு.க எம்.பி கனிமொழி எச்சரிக்கை

கன்னியாக்குமாரியில் இலங்கை அகதிகளிடம் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர்கள் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்ததற்கு தி.மு.க மகளிரணி செயலாளர் கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

”ஜனநாயக நாட்டில் ஊடகங்கள் மீது தாக்குதல் நடத்துவதா?”: எடப்பாடி அரசிற்கு தி.மு.க எம்.பி கனிமொழி எச்சரிக்கை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மோடி அரசாங்கம் கொண்டுவந்த குடியுரிமை சட்டத்தால் இலங்கைத் தமிழ் அகதிகள் சந்திக்கும் பிரச்சனை மற்றும் அவர்களின் கோரிக்கை என்ன என்பதை தெரிந்துக்கொள்ள கன்னியாக்குமாரியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமிற்கு ஜூனியர் விகடன் நிருபர் சிந்து மற்றும் புகைப்படக்காரர் ராம்குமார் இருவர் சென்றுள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் இருவர் மீதும் மார்த்தாண்டம் போலிஸார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் ஜாமீனில் வெளிவரமுடியாதபடி வழக்குகளை போலிஸார் பதிவு செய்துள்ளனர்.

போலிஸாரின் இந்த நடவடிக்கை பத்திரிக்கையாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு தி.மு.க மகளிரணி செயலாளர் கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில், “ஊடகங்களை மிரட்டும் நோக்கோடு, கன்னியாக்குமரியில் உள்ள இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் சென்று பேட்டியெடுத்த ஜூனியர் விகடன் நிருபர்கள் மீது, பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் எடப்பாடி அரசு வழக்கு பதிவு செய்துள்ளது.

ஒரு ஜனநாயக நாட்டில், ஊடகங்களின் மீது நடத்தப்படும் இது போன்ற தாக்குதல்கள், கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும். உடனடியாக ஊடகத்தினர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்த அ.தி.மு.க அரசுக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories