குழந்தைகள் ஆபாச படம் மற்றும் வீடியோக்களை பார்ப்பவர்களின் பட்டியலில் தமிழகம் முன்னிலை வகிப்பதாக அண்மையில் தமிழக காவல்துறைக்கு உள்துறை அமைச்சகத்திடமிருந்து அறிக்கை வந்துள்ளது.
அதனையடுத்து, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி ரவி, யாரெல்லாம் குழந்தைகள் ஆபாசப் படங்களை பார்க்கிறார்கள் என்ற பட்டியலை தயாரித்துள்ளதாகத் தெரிவித்தார்.
அதனடிப்படையில், 3,000 பேர் கொண்ட பட்டியலை வைத்துள்ளதாகவும், அவர்கள் அனைவரின் மீதும் வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூடுதல் டி.ஜி.பி ரவி தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், திருச்சியில் குழந்தைகள் ஆபாச வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்த 42 வயதுடைய கிறிஸ்டோபர் அல்ஃபோன்ஸ் என்ற நபரை போலிஸார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் இந்த நபர் தான் முதன்முதலில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இதேபோன்று குழந்தைகள் ஆபாச வீடியோ பார்ப்பவர்களையும், பதிவேற்றம் செய்து பரப்புபவர்களையும் காவல்துறை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.