தமிழ்நாடு

ஆயுள் கைதிகளை விடுதலை செய்வதில் அரசின் நிலைப்பாடு ஏன் வெவ்வேறாக உள்ளது - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

ஆயுள் கைதிகளை முன்கூட்டி விடுதலை செய்யும் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு வெவ்வேறாக இருப்பது ஏன் என விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆயுள் கைதிகளை விடுதலை செய்வதில் அரசின் நிலைப்பாடு ஏன் வெவ்வேறாக உள்ளது - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அருகே உள்ள இரணியன் அல்லி கிராமத்தைச் சேர்ந்த செந்தில், கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாகச் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 14 ஆண்டுகளாகத் தண்டனை அனுபவித்து வரும் தன் மகனை, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி முன் கூட்டி விடுதலை செய்யக் கோரி, அவரது தாய் அமுதா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரரின் கோரிக்கையை 6 வாரங்களில் பரிசீலிக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, முன் விடுதலை கோரும் மனுக்களைச் சிறை விதிகளுக்குட்பட்டு சிறை அதிகாரி பரிசீலித்து, அவர் திருப்தி அடையும் பட்டத்தில் சிறைத்துறை தலைவருக்கு அனுப்புவார் என்றும், அதன்பின்னர் தமிழக உள்துறைக்கு அனுப்பப்பட்ட பிறகு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் எனத் தெரிவித்தார்.

அரசின் பரிந்துரையைத் தன்னிச்சையாக ஆராயும் ஆளுநர் எடுக்கும் முடிவின் அடிப்படையிலேயே விடுதலை முடிவு என்பது இருக்கும் எனத் தெரிவித்த அவர், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் யோகா செந்திலை முன்கூட்டி விடுதலை செய்யக் கோரிய மனு நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். அதைக் கேட்ட நீதிபதிகள், கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டால் வாழ்நாள் முழுவதும் சிறையில்தான் இருக்கவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றனர்.

தர்மபுரி பேருந்து தீ வைப்பு சம்பவத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களை, அரசு முன் கூட்டி விடுதலை செய்திருப்பதையும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 7 பேரை விடுவிக்க அரசு தீர்மானம் இயற்றியதையும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ஒவ்வொரு வழக்கிற்கும் அரசு வெவ்வேறு நிலைப்பாட்டை எடுப்பது ஏன் என கேள்வி எழுப்பினர். சந்தர்ப்ப வசத்தால் குற்றம் புரிந்த செந்தில் போன்றவர்களை விடுவிப்பதில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையைக் காரணம் காட்டுவதாகவும் கூறினர்.

10 ஆண்டுகள் தண்டனையை நிறைவு செய்தவர்களை விடுவிக்க வேண்டுமென அரசு முடிவெடுத்தால் அது அனைவருக்கும் சமமாகத்தானே இருக்க வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள், அரசியல் அழுத்தம் காரணமாக இதுபோல முடிவுகள் எடுக்கப்படுகிறதா எனவும் கேள்வி எழுப்பினர். யோகா செந்தில் விவகாரத்தில் அரசு மாற்று நிலைப்பாடு எடுக்கக் காரணம் என்ன என விளக்கமளிக்க அரசுத்தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை தள்ளிவைத்தனர்.

banner

Related Stories

Related Stories