ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதற்கு பரிந்துரை செய்து தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது.
2018ம் ஆண்டு அனுப்பி வைக்கப்பட்ட இந்தத் தீர்மானம் மீது ஆளுநர் இன்னும் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். எழுவர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு இயற்றிய தீர்மானத்திற்கு கவர்னர் ஒப்புதல் வழங்க உத்தரவிட வேண்டும் என நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், சுப்பையா, சரவணன் ஆகியோர் அமர்வு, நளினியின் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக்கூறி தள்ளுபடி செய்தது. மேலும், அமைச்சரவை தீர்மானம் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.