தமிழ்நாடு

மாணவர்கள் சேர்க்கையில் முறைகேடு: காமராஜர் பல்கலை., மீது நடவடிக்கை எடுக்க வைகோ வலியுறுத்தல்

மாணவர்கள் சேர்க்கையில் மாபெரும் மோசடி, முறைகேடுகளில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ளது. எனவே பல்கலைக்கழகத்தின் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

மாணவர்கள் சேர்க்கையில் முறைகேடு: காமராஜர் பல்கலை., மீது நடவடிக்கை எடுக்க வைகோ வலியுறுத்தல்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கையின் போது நிர்வாகம் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறது என மாணவர்கள் பலர் புகார் அளித்தனர். அந்த புகார்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் தெரிவித்ததாவது," மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், பல்வேறு முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பு, பிப்ரவரி முதல் வாரம் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பில், தேசிய அளவிலான முதுநிலைப்படிப்புகள், நுழைவுத்தேர்வு அடிப்படையிலான முதுநிலை பட்டப்படிப்புகள், நுழைவுத் தேர்வு இன்றி, இளநிலை பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையிலான முதுநிலை பட்டப்படிப்புகள் மற்றும் ஐந்து ஆண்டுகள் ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப்படிப்பு என முதுநிலைப் பட்டப் படிப்புகள் அனைத்தும் நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டு இருந்தன. இவை அனைத்திற்கும் இணைய வழியில்தான் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மாணவர்கள் சேர்க்கையில் முறைகேடு: காமராஜர் பல்கலை., மீது நடவடிக்கை எடுக்க வைகோ வலியுறுத்தல்

முதல் இரண்டு பிரிவுகளுக்கும் விண்ணப்பிக்கக் கடைசி நாள் 8.3.2019ம் அதற்கான நுழைவுத்தேர்வு மார்ச் 23, 24 ஆகிய நாள்களில் நடைபெறும் என்றும், மூன்றாவது பிரிவுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் 5.4.2019, நான்காவது பிரிவுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் 31.5.2019 என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், புவியியல், தமிழ், ஆங்கிலம், உடற்கல்வியியல் மற்றும் கல்வியியல் ஆகிய 9 பாடப்பிரிவுகள், நுழைவுத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலும், மொழியியல், மலையாளம், பிரெஞ்சு, பொருளாதாரம், அரசியல் அறிவியல், வரலாறு, சமூக அறிவியல் உள்ளிட்ட 22 படிப்புகளுக்கு, இளநிலை பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், ஐந்து ஆண்டுகள் ஒருங்கிணைந்த வணிக மேலாண்மை முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு, மேல்நிலைக் கல்வியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்தப்பெறும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

நுழைவுத் தேர்வு உடைய படிப்புகளுக்கு ரூ 300, நுழைவுத் தேர்வு இல்லாத படிப்புகளுக்கு ரூ 200 கட்டணம் இணைய வழியில் பெறப்பட்டது. அதன்பின்னர், நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் பட்டியல், 19.3.2019 அன்று பல்கலைக்கழக இணையத்தில் வெளியிடப்பட்டது.

அதே நாளில், நுழைவுத் தேர்வு எழுதுவதற்கான அனுமதிச் சீட்டுகளும் தரப்பட்டன. 24.3.2019 அன்று மதுரையில் மட்டும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து மட்டும் அன்றி, புதுச்சேரி, கேரளாவில் இருந்தும் மாணவர்கள் மதுரைக்கு வந்து தேர்வு எழுதினர். ஆனால் முடிவுகள் எதையும் வெளியிடவே இல்லை. மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களும் வெளியிடப்படவில்லை. மாணவர்களுக்கும் எந்தத் தகவலும் அனுப்பவில்லை.

நுழைவுத் தேர்வு இல்லாத பிரிவுகளுக்கும் அவர்கள் இளநிலை பட்டப்படிப்பில் பருவத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரப்பட்டியல் எதுவும் வெளியிடவில்லை. ஆனால் அவர்களை, 13.5.2019 அன்று நடைபெற உள்ள கலந்தாய்வுக்கு வரும்படி, பல்கலைக் கழக நிர்வாகம் கடிதம் அனுப்பியது. நுழைவுத் தேர்வு எழுதிய சில மாணவர்களுக்கும் கடிதங்கள் அனுப்பியது. இந்தக் கடிதங்கள் அனைத்தும், மே 10 ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு மேல் சாதாரண அஞ்சலில் அனுப்பப்பட்டு இருக்கின்றன. இடையில் உள்ள இரண்டு நாள்களில் ஒரு நாள் விடுமுறை.

மாணவர்கள் சேர்க்கையில் முறைகேடு: காமராஜர் பல்கலை., மீது நடவடிக்கை எடுக்க வைகோ வலியுறுத்தல்

எனவே, பெரும்பாலான கடிதங்கள் மாணவர்களுக்குப் போய்ச் சேரவே இல்லை. எனவே, திங்கட் கிழமை கலந்தாய்வில் குறைந்த அளவு மாணவர்களே கலந்து கொண்டனர். மற்ற இடங்கள் அனைத்தும் காலி இடங்கள் என, பிற்பகல் இரண்டு மணிக்கே அறிவிப்பு வெளியிட்டு விட்டார்கள். அதன்பிறகு, பிற்பகல் 3 மணிக்கே, உடனடி மாணவர் சேர்க்கை (Spot admission) என அறிவித்து, அவசர அவசரமாக மாணவர் சேர்க்கை நடத்தி முடித்துள்ளனர்.

அதேபோல, அறிவியல் முதுநிலை பட்டப்பிரிவுகளுக்கு, 25.5.2019 அன்று கலந்தாய்வு நடத்தினர். அதற்கான அறிவிப்பும் மூடு மந்திரம்தான். நுழைவுத் தேர்வு முடிவுகளை அறிவிக்காமலேயே, இதற்கும் உடனடி மாணவர் சேர்க்கை நடத்தி இருக்கின்றனர்.

ஆனால், பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பில், உடனடி மாணவர் சேர்க்கை குறித்து எந்தவிதமான அறிவிப்பும் கிடையாது. நாளிதழ்கள், ஊடகங்களில் எந்தவிதமான விளம்பரமும் செய்யவில்லை. கலந்தாய்வுக்கு முதல் நாள், பல்கலைக்கழக வாயிலில் ஒரு விளம்பரப் பதாகை மட்டுமே வைத்து இருந்தனர். இத்தகைய மோசடியான மாணவர் சேர்க்கையினால், தகுதி உள்ள பல மாணவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை; தகுதி இல்லாத பலர் சேர்ந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள மற்ற பல்கலைக்கழகங்கள், நுழைவுத் தேர்வில் 50 மதிப்பெண்கள், இளநிலை பட்டப்படிப்பில் 50 மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு மட்டுமே இடம் என்ற அளவில் சேர்க்கை நடத்துகையில், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை அனைத்தும் மூடு மந்திரமாகவே நடத்தி முடிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த விவரங்கள் எதுவும் தெரியாத மாணவர்கள் பலர், இன்னமும் பல்கலைக்கழகத்தின் வலைத்தளத்தையே பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.

மாணவர்கள் சேர்க்கையில் முறைகேடு: காமராஜர் பல்கலை., மீது நடவடிக்கை எடுக்க வைகோ வலியுறுத்தல்

இந்த நிலையில், மாணவர் சேர்க்கையில் தாங்கள் செய்த தவறுகளையும், முறைகேடுகளையும் மறைப்பதற்காக, மதுரை காமராசர் பல்கலைக்கழக வலைதளத்தில் வெளியிடப்பட்டு இருந்த மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்புகள், நுழைவுச் சீட்டு அறிவிப்புகள் அனைத்தையும் திடீரென நீக்கி விட்டனர். இது மாணவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

எனவே, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 2019-20 கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கையில் நடைபெற்றுள்ள மாபெரும் மோசடி குறித்து, தக்க விசாரணை நடத்த வேண்டும். முறைகேடான மாணவர் சேர்க்கையை ரத்து செய்ய வேண்டும், தகுதி உடைய மாணவர்களுக்கு முதுநிலை பட்டப்படிப்புகளில் இடம் கிடைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முறைகேடு செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகின்றேன்.” என தனது அறிக்கையில் வைகோ தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories