நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான முடிவுகள் நேற்று (மே 23) வெளியானது. இதில் 350 தொகுதிகளில் வெற்றிபெற்று பா.ஜ.கவின் மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.
தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளை வென்று அமோக வெற்றியை தமிழக மக்களுக்கு பரிசாக அளித்திருக்கிறது தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி.
இந்த நிலையில், தி.மு.க. கூட்டணியில் உள்ள வி.சி.க. தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தனித் தொகுதியில் போட்டியிட்டார். சிதம்பரம் தொகுதிக்கான வாக்குப்பதிவின் போது பல்வேறு வன்முறைகள், கலவரங்களை அரங்கேற்றி இருந்தது ஆளும் வர்க்கம்.
அந்த வகையில் வாக்கு எண்ணிக்கையின் போதும், பல்வேறு சூழ்ச்சிகளில் அ.தி.மு.கவினர் ஈடுபட முயற்சித்தது. ஆனால் அந்த சூழ்ச்சிகளை தவிடுபொடியாக்கியுள்ளார் வி.சி.க. தலைவர் திருமாவளவன்.
நள்ளிரவு வரை தொடர்ந்த சிதம்பரம் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையில் 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவனை வெற்றிபெற செய்துள்ளனர் சிதம்பரம் தொகுதி மக்கள்.
இந்த வெற்றியை சிதம்பரம் தொகுதியின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், தனது வெற்றிக்காக உழைத்த தி.மு.க. தலைவர் தளபதி ஸ்டாலினுக்கும் அர்ப்பணிக்கிறேன் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றதை அடுத்து, தனது தாயாரிடம் ஆசியையும், வாழ்த்துகளையும் பெற்றுள்ளார் திருமாவளவன். மேலும், வெற்றியைக் கொண்டாடுவதற்காக இனிப்புகளை வழங்கி மகிழ்ந்துள்ளார்.