
ஐபிஎல் தொடரின் இன்றைய முதல் ஆட்டத்தில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல் அணியும், ஸ்ரேயாஸ் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து பேட்டிங்கை தொடங்கிய டெல்லி அணி வீரர்கள் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி தொடக்க ஆட்டக்காரர் நிசங்கா 11 ரன்களில் ஆட்டமிழந்தாலும், அடுத்து இறங்கிய நிதிஸ் ராணாவுடன், கே.எல்.ராகுல் இணைந்து அதிரடியாக ஆடினர்.
இருவரின் இணை பஞ்சாப் வீரர்கள் வீசிய பந்துகளை நாலாப்புறமும் சிதற விட்டனர். இந்த ஆட்டத்தில் மிரட்டல் ஆட்டம் ஆடிய கே.எல்.ராகுல் 47 பந்துகளில் 12 பவுண்டரிகள், 5 சிக்சர்களுடன் அதிரடி சதம் விளாசினார். இந்த சதத்தின் மூலம் தனது 6வது ஐபிஎல் சதத்தை பதிவு செய்தார் கே.எல்.ராகுல்.

பின்னர் தொடர்ந்து விளையாடிய கே.எல்.ராகுல் இன்னிங்சின் இறுதி வரை இருந்து 152 ரன்களை குவித்தார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரு இந்திய வீரரின் அதிகபட்ச ரன்னாக இது பதிவாகியுள்ளது. மேலும், ஐஇபெல் தொடரின் அதிகபட்ச ரன் அடித்த வீரர்களின் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார் கே.எல்.ராகுல். இவருடன் ஆடிய நிதிஸ் ராணா அதிரடியான ஆட்டத்தின் மூலம் 91 ரன்களை குவித்தார். இவர் 4 சிக்சர்கள், 11 பவுண்டரிகள் விளாசியிருந்ந்தார்.
முதல் இன்னிங்ஸ் முடிவில் 20 ஓவர்களுக்கு 265 என்ற இமாலய இலக்கை பஞ்சாப் அணிக்கு நிர்ணயித்துள்ளது டெல்லி அணி. இந்த இலக்கை எட்டிப்பிடிக்குமா பஞ்சாப் கிங்ஸ் அணி என்பதை பார்க்கலாம்.






