
டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கை நாட்டில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா, இலங்கை உள்ளிட்ட 8 அணிகள் தகுதி பெற்றுள்ளது.
கடந்த 16ம் தேதி நடந்த குரூப்-பி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை அணி. இதன் மூலம் அந்த அணி சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இந்தப்போட்டியில் இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரானா காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளார்.
கெண்டைக்காலில் அவருக்கு தசைப்பிடிப்பு யேற்பட்டுள்ளதால் காயத்திலிருந்து அவர் மீண்டு வர பல வாரங்கள் ஆகலாம் என்பதால் டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளார். பதிரனாவுக்கு பதிலாக மாற்று வீரராக தில்ஷன் மதுஷங்கா இலங்கை அணியில் இடம் பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான குரூப் பி போட்டியின் போது, பதிரானாவின் இடது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதை ஐசிசி உறுதி செய்தது. இதனால் அவர் போட்டியிலிருந்து உடனடியாக வெளியேறினார். ஏற்கனவே சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா அயர்லாந்துக்கு எதிரான போட்டியின் போது தொடை தசைநார் காயத்தால் விளையாட முடியாமல் போனது. தற்போது பதிரானவுக்கும் காயம் ஏற்பட்டுள்ளதால் இலங்கை அணிக்கு இது இரண்டாவது அடியாக விழுந்துள்ளது.

இலங்கை அடுத்ததாக கொழும்பில் ஜிம்பாப்வேயுடன் தனது இறுதி குரூப் பி போட்டியில் விளையாடுகிறது. அதன் பிறகு வரும் பிப்ரவரி 22ம் தேதி பல்லேகேலில் இங்கிலாந்துக்கு எதிராக சூப்பர் எட்டுப் பயணத்தைத் தொடங்குகிறது.
பதிரானவின் காயம் இலங்கை அணிக்கு மட்டுமில்லாமல், ஐபிஎல் 2026ல் கேகேஆர் அணிக்கும் பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஐபிஎல் 2026 ஏலத்தில் பதிரனாவை ரூ. 18 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது கேகேஆர் அணி. வங்கதேச இடது கை வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானையும் ரூ. 9 கோடிக்கு ஒப்பந்தம் செய்தனர். ஆனால், பிசிசிஐ நிர்வாக முடிவு காரணமாக, கேகேஆர் முஸ்தபிசுர் ரஹ்மானையும் விடுவித்தது. அவருக்கு இதுவரை மாற்று வீரரை அணி ஒப்பந்தம் செய்யவில்லை.

இதுமட்டுமின்றி, இந்திய வீரர் ஹர்ஷித் ரானாவும் ஐபிஎல் 2026 தொடரில் பாதியோ அல்லது முழுவதுமாக தவறவிடலாம் என கூறப்படுகிறது. 2026 டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தின்போது ஏற்பட்ட முழங்கால் காயம் காரணமாக அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இப்படி முக்கிய வீரர்கள் இல்லாதது கேகேஆர் அணிக்கு பெரிய பின்னடைவாக இருக்கும் என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.








