சென்னை அண்ணா நகரில் மேக்ஸிவிஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனையானது சென்னையில் 10 கிளைகளை தொடங்கும் தொடக்க விழா நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கலந்து கொண்டு 10 மருத்துவமனைகளையும் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்..
தொடர்ந்து மேடையில் பேசிய மகேந்திர சிங் தோனி, "சென்னையுடன் எனக்கு நீண்ட நாள் உறவு இருக்கிறது. ஐ.பி.எல் 2008 இல்தான் தொடங்கியது. அதற்கு முன்பே சென்னை எனக்கு ஸ்பெசலானது தான். 2005 இல் என்னுடய டெஸ்ட் அறிமுகம் இங்கேதான் நடந்தது. ஐ.பி.எல் க்காக ஒவ்வொரு ஆண்டும் 45-50 நாட்களை இங்கே செலவழிக்கிறேன். இங்கிருக்கும் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் உணர்ந்திருக்கிறேன். சென்னை ரசிகர்களின் ஆதரவு வெகுவாக இருக்கும்.
எந்த சீசனும் எங்களுக்கு சுலபமானதாக இருந்ததில்லை. கடைசி நான்கு லீக் போட்டிகளில் 2-3 போட்டிகளில் வெல்ல வேண்டும் என்ற நிலையில்தான் இருப்போம். அந்த மாதிரியான சமயங்களில் ரசிகர்களின் ஆதரவு ஊக்கமாக இருக்கும். கிரிக்கெட்டை பொறுத்தவரைக்கும் பேப்பரில் உங்கள் அணி எப்படி இருக்கிறது என்பது முக்கியமில்லை. களத்தில் எப்படி செயல்படுகிறோம் என்பதே முக்கியம். ஆம், கடந்த இரண்டு சீசன்கள் எங்களுக்கு சரியாக அமையவில்லைதான். ஆனால், எங்களின் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்கிறோம்.
கடந்த 14-15 ஆண்டுகளில் என்ன செய்திருக்கிறோம் என்பதை யாரும் மதிக்கமாட்டார்கள். இப்போது என்ன செய்கிறோம் என்றுதான் பார்ப்பார்கள். எங்களின் பேட்டிங் ஆர்டர் இப்போது கொஞ்சம் சரியாகியிருக்கிறது. ஐபிஎல் சென்னை அணியில் ருத்துராஜ் காயத்திலிந்து மீண்டு வந்துவிடுவார். மினி ஏலத்தில் அணியின் ஓட்டைகளை அடைக்கும் வகையில் வீரர்களை எடுக்க வேண்டும். ஓய்வு பெறும் வயது என்று ஒன்று உண்டு. அடுத்த தலைமுறைக்கு வாய்ப்பை கொடுத்துவிட்டு செல்வது நல்லதுதான்.
தோல்விகள்தான் நிறைய விஷயங்களை கற்றுக்கொடுக்கும். விஷயங்களை கற்றுக்கொள்ள நீங்கள் தவறு செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. எதிரணியினர் செய்யும் தவறுகளிலிருந்து கூட நான் பாடம் கற்றுக்கொள்வேன்.நிறைய புதிய மனிதர்களை சந்தியுங்கள். உங்களின் கண்களையும் காதுகளையும் திறந்து வையுங்கள். அப்போதுதான் நிறைய அனுபவங்களை பெற முடியும்.
வாழ்க்கை அழகானது. சக மனிதர்களிடம் உரையாடுங்கள். உங்களின் சக பணியாளர்களிடம் 'வாழ்க்கை எப்படி போகிறதென வினவுங்கள். அப்படி செய்தால் உங்களின் கடினமான காலத்தில் அவர் அதே விஷயத்தை உங்களுக்கும் செய்வார்.நான் கண் பரிசோதனை செய்துகொண்டேன். 5 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடும் அளவுக்கு கண் நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் செர்டிபிகேட் கொடுத்திருக்கின்றனர். ஆனால், கிரிக்கெட் ஆட கண் மட்டும் போதாதே. உடம்பும் தேவைதானே" என அவர் தெரிவித்தார்.