ருமேனியாவின் புகரெஸ்ட் நகரில் சூப்பர்பெட் கிளாசிக் தொடர் நடைபெற்றது. உலகின் முன்னணி வீரர்கள் கலந்துகொண்ட இந்த போட்டியில் 10 சுற்றுகள் முடிவில் அதிக புள்ளிகள் பெறுபவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். இதில் 18 வயதான இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா ஆரம்பத்தில் இருந்தே அசத்தலாக செயல்பட்டார்.
எனினும் 10 சுற்றுகள் நடந்து முடிந்த நிலையில் 5.5 புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா, பிரான்சின் மாக்சிம் வச்சியர்-லக்ரேவ், அலிரேசா பிரூஸ்ஜா ஆகியோர் சம நிலையில் இருந்தனர். இதனால் வெற்றியாளர்களை கண்டறிய டை பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது.
இதில் முதல் இரண்டு டை பிரேக்கர் போட்டிகள் சமனில் முடிவடைந்த நிலையில், 3-வது டை பிரேக்கரில் வச்சியர்-லக்ரேவை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள வாழ்த்து பதிவில், " ‘சூப்பர்பெட் செஸ் கிளாசிக் 2025’ போட்டியில் வாகைசூடி, தனது முதல் கிராண்ட் செஸ் டூர் பட்டத்தை வென்றுள்ள ‘நமது சென்னையின் பெருமிதம்’ கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகள். இந்திய சதுரங்கத்தின் குறிப்பிடத்தக்க இந்த தருணத்தை தமிழ்நாடே கொண்டாடுகிறது"என்று கூறியுள்ளார்.