5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.
அதன்பின்னர் 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடருக்கு அனைத்து அணிகளும் தயாராகிவரும் நிலையில், வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டனும் , சீனியர் நட்சத்திர வீரருமான தமீம் இக்குபால் ஓய்வை அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது தனது ஓய்வு முடிவை அறிவித்த அவர், உணர்ச்சிப்பெருக்கில் கண்ணீர் சிந்திய புகைப்படம் இணையதளத்தில் வைரலானது. உலகக்கோப்பை தொடர் நெருங்கும் சமயத்தில், முக்கிய வீரர் ஓய்வை அறிவித்தது வங்கதேச அணியில் பிரச்சனை இருப்பதை உறுதி செய்தது.
மேலும், தமீம் இக்குபாலுக்கும் பங்களாதேஷ் கிரிக்கெட் சேர்மன் நஸ்முல் ஹசனுக்கும் மோதல் போக்கு இருந்தது என்றும், இதனால்தான் தமீம் இக்குபால் ஓய்வை அறிவித்தார் என்றும் வங்கதேச மீடியாக்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்த நிலையில், தற்போது இது குறித்து பங்களாதேஷ் கிரிக்கெட் சேர்மன் நஸ்முல் ஹசன் விளக்கமளித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் இது குறித்து பேசிய அவர், " தமீம் இக்குபாலின் இந்த முடிவை மிகவும் உணர்ச்சி வசப்பட்ட ஒரு முடிவாக தான் நான் பார்க்கிறேன்.அவர் நமது ஒருநாள் கிரிக்கெட் திட்டங்களில் மிக முக்கியமான வீரர். அவர் மனம் மாறினால் நான் மகிழ்ச்சி அடைவேன். அவரது தலைமையின் கீழ் அணி விளையாடுவது மிகவும் நன்றாக இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம். தற்பொழுது இது அனைத்து தீங்கு விளைவிக்கும் என்று நாங்கள் உணர்கிறோம்.
அவரைப் போன்ற ஒரு ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் உணர்ச்சிவசப்பட்டு இப்படியான ஒரு முடிவை எடுக்கக் கூடாது. நான் அவருக்கு ஒரு செய்தி அனுப்பி உள்ளேன். அதற்கு அவர் பதில் அளிப்பாரா என்று நான் காத்திருக்கிறேன்.முக்கிய கட்டத்தில் கேப்டன் ஓய்வு பெறுவது அணிக்கு நல்லது கிடையாது. நாங்கள் அவருக்கு ஒரு நல்ல பிரியா விடை கொடுக்க நினைக்கிறோம். ஆனால் இதற்குப் பிறகும் அவர்கள் விளையாட விரும்பவில்லை என்றால் நாம் என்ன செய்ய முடியும்? " என்று கூறியுள்ளார்.