விளையாட்டு

ஸ்ரீனிவாசன் கையைவிட்டுப் போகாத கிரிக்கெட் கவுன்சில்... TNCA தலைவராக தேர்வுசெய்யப்பட்ட ரூபா குருநாத்!

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக ரூபா குருநாத் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

ஸ்ரீனிவாசன் கையைவிட்டுப் போகாத கிரிக்கெட் கவுன்சில்... TNCA தலைவராக தேர்வுசெய்யப்பட்ட ரூபா குருநாத்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக முன்னாள் பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசனின் மகள் ரூபா குருநாத் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவரான ஸ்ரீனிவாசன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராகவும், பிசிசிஐ தலைவராகவும், ஐசிசி தலைவராகவும் கிரிக்கெட் வாரியத்தின் உச்ச பதவிகளை அலங்கரித்திருக்கிறார். ஐ.பி.எல் போட்டிகளின் முக்கிய அங்கமாகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராகவும் செயல்பட்டார்.

ஐ.பி.எல் போட்டிகளில் ஸ்பாட் ஃபிக்சிங்கில் ஈடுபட்டது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) தலைவர் பதவியில் இருந்து ஸ்ரீனிவாசனை கடந்த 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.

ஆனால், அதன்பிறகு சீனிவாசன் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராக கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து ஐசிசி தலைவர் பதவியிலிருந்தும் 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் நீக்கப்பட்டார்.

ஸ்ரீனிவாசன் கையைவிட்டுப் போகாத கிரிக்கெட் கவுன்சில்... TNCA தலைவராக தேர்வுசெய்யப்பட்ட ரூபா குருநாத்!

சென்னை சூப்பர் கிங்ஸ் மீதான சர்ச்சைகளுக்குப் பின், சீனிவாசன் கடந்த சில ஆண்டுகளாக கிரிக்கெட் அமைப்புகளின் பதவிகளை வகிக்கவில்லை. இந்த நிலையில், அவரது மகள் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவியைப் பிடித்துள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் தலைவர் இல்லாத நிலையில், தற்போது தலைவராக தேர்வு செய்யப்பட்டார் ரூபா குருநாத். வேறு யாரும், தலைவர் பதவிக்கு போட்டியிடாததை அடுத்து, ரூபா குருநாத் ஒருமனதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டார். மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக பெண் ஒருவர் பதவியேற்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீனிவாசன் கையைவிட்டுப் போகாத கிரிக்கெட் கவுன்சில்... TNCA தலைவராக தேர்வுசெய்யப்பட்ட ரூபா குருநாத்!

ரூபாவின் கணவர் குருநாத் மெய்யப்பன் 2013 ஐபிஎல் சூதாட்ட சர்ச்சையில் சிக்கினார். அவருக்கு ஐபிஎல்-ல் பங்கேற்க வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், அவரது மனைவியே தற்போது கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகியுள்ளார்.

முன்னதாக, ஸ்ரீனிவாசன் குடும்பத்தினரே கிரிக்கெட் வாரியத்தில் ஆதிக்கம் செலுத்துவதாக குற்றம்சாட்டப்படுவது உண்டு. ஸ்ரீனிவாசன் பதவியில் இல்லாவிட்டாலும், அவரது மகள் தற்போது பதவிக்கு வந்திருப்பது இந்தக் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தியிருக்கிறது.

banner

Related Stories

Related Stories