விளையாட்டு

நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி விளையாட தடை : அதிர்ச்சியில் கால்பந்து ரசிகர்கள் !

தென் அமெரிக்க கால்பந்து சம்மேளனத்தில் ஊழல் நடைபெறுகிறது என்று நட்சத்திர வீரர் மெஸ்ஸி பேசியதற்காக அவருக்கு 3 மாதங்கள் சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி விளையாட தடை : அதிர்ச்சியில் கால்பந்து ரசிகர்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தென்னமெரிக்க கால்பந்து அணிகளுக்கு இடையே கடந்த சில நாட்களுக்கு முன் கோபா அமெரிக்க கால்பந்து தொடர் நடைபெற்றது. இதன் அரையிறுதியில் அர்ஜெண்டினா-பிரேசில் மோதின. அந்த ஆட்டத்தில் அர்ஜெண்டின அணிக்கு 2 பெனால்டி வாய்ப்புகள் மறுக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த அர்ஜெண்டினா வீரர் மெஸ்ஸி, கோபா அமெரிக்காவை பிரேசிலுக்கே எழுதிவைத்துவிட்டனர் என்றும், நடுவர்கள் பெரிய தொகையை வாங்கிவிட்டு சாதகமாக செயல்படுகின்றனர் என்றும் பேசினார்.

இதையடுத்து, ஜூலை 6ஆம் தேதி நடைபெற்ற 3வது மற்றும் 4வது இடத்திற்கான ஆட்டத்தில் அர்ஜெண்டினா-சிலி அணிகள் மோதின. இந்த போட்டியில் 2க்கு1 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா வெற்றி பெற்று 3வது இடம் பிடித்தது. ஆனாலும், இந்த போட்டியில் சிலி அணி வீரர் கேரி மெடெலுக்கும்(Gary Medel), மெஸ்ஸிக்கும் மோதல் ஏற்பட்டதால், போட்டியின் போது நடுவரால் சிகப்பு அட்டை காட்டப்பட்டு மெஸ்ஸி வெளியேற்றப்பட்டார். போட்டி முடிந்ததும், மீண்டும் குற்றம் சாட்டி பேசிய மெஸ்ஸி, பதக்கத்தை பெறுவதற்கும் வரவில்லை.

ஆகையால், மெஸ்ஸி சர்வதேச போட்டிகளில் 3 மாதம் பங்கேற்க கூடாது என தடை விதிக்கப்பட்டதோடு, 50,000 டாலரும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. தனக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மெஸ்ஸி மேல்முறையீடு செய்ய 7 நாட்கள் அவகாசம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையால், உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் மெஸ்ஸி விளையாடுவதற்கு எந்த பாதிப்பும் இருக்காது. ஆனால், 7 நாட்களுக்குள் ஏதும் மாற்றமில்லை என்றால், அடுத்து வரக்கூடிய சிலி, மெக்சிகோ, ஜெர்மனி அணிகளுக்கு எதிரான நட்பு ரீதியிலான ஆட்டத்தில் மெஸ்ஸி விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அர்ஜெண்டின நட்சத்திர வீரரும், உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரருமான மெஸ்ஸிக்கு விளையாட தடை விதிக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories