சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி, கிரிக்கெட் விளையாட்டில் சாதனை புரியும் வீரர்களைக் கௌரவப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் 'ஹால் ஆஃப் ஃபேம்' விருதுகளை வழங்கிவருகிறது.
அவ்வகையில், இந்த ஆண்டுக்கான ஹால் ஆஃப் ஃபேம் விருது இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், தென் ஆப்ரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனால்ட், ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு வீராங்கனை கேத்ரின் ஃபிட்ஸ்பாட்ரிக் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதைப் பெறும் ஆறாவது இந்திய வீரர் சச்சின் ஆவார். இதற்கு முன்னதாக, இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர், கபில் தேவ், பிஷன் சிங் பேடி அணில் கும்ப்ளே மற்றும் ட்ராவிட் ஆகியோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர்.
இதுகுறித்து பேசிய சச்சின், 'ஐ.சி.சி ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்படுவது ஒரு மரியாதை, இது தலைமுறை தலைமுறையாக கிரிக்கெட் வீரர்களின் பங்களிப்பை மதிக்கிறது. அவர்கள் அனைவரும் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு பங்களித்திருக்கிறார்கள், நான் எனது முயற்சியைச் செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த சந்தர்ப்பத்தில், “ எனது பெற்றோர், சகோதரர் அஜித் மற்றும் மனைவி அஞ்சலி ஆகியோர் எனக்கு தூண்களாக இருந்தனர். அதே நேரத்தில் பயிற்சியாளர் ராம்கந்த் அச்ரேக்கர் போன்ற ஒருவரை சிறந்த ஆரம்ப வழிகாட்டியாக நான் பெற்றேன்” இவ்வாறு தெரிவித்தார்.