
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிந்தது. இதற்கான முடிவுகள் மே மாதம் வெளியானது. அதன்பின்னர், 2 மாதங்களுக்குள்ளேயே அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேர் அடுத்தடுத்து பதவி விலகியதோடு, தவெக-வின் இணைந்தனர். இந்தச் சம்பவம் தமிழ்நாடு அரசியில் வட்டாரத்தில் பெரும் பூதாகரமாக வெடித்தது.
தமிழ்நாடு முழுவதும் தற்போது திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், விராலிமலை, பெருந்துறை, கரூர், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளன.
இந்நிலையில் காலியாக உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் தேதியைத் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செப்டம்பர் 9-ம் தேதி தொடங்குகிறது. செப்டம்பர் 16-ம் தேதி வேட்புமனுத் தாக்கலுக்கான கடைசி நாளாகவும், வேட்புமனு பரிசீலனை செப்டம்பர் 17-ம் தேதி தொடங்கும் என்றும், வேட்புமனுவைத் திரும்பப்பெற செப்டம்பர் 19-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், அக்டோபர் 9 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், விராலிமலை, பெருந்துறை மற்றும் கரூர் ஆகிய மீதமுள்ள 5 தொகுதிகளுக்குத் தேர்தல் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அத்தொகுதிகளுக்கு தற்போது தேர்தல் அறிவிக்கப்படவில்லை எனத் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
இதுமட்டுமில்லாது, பாண்டிச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதிக்கும், மேற்குவங்க மாநிலத்தில் ரெஜிநகர் மற்றும் நந்திகிராம் ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், அசாம் மாநிலத்தின் நாகோம் நாடாளுமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தலை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.






