
நீட் தேர்வுக்கு பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி டெல்லியில் கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டம் நடத்தி வந்தனர் .
இதைத்தொடர்ந்து, இன்று (ஜூலை 20) நாடாளுமன்றக் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்வதாக அறிவித்திருந்தனர்.
ஆனால், நேற்று (ஜூலை 19) இரவு டெல்லி காவல்துறை முறையான அனுமதி பெறவில்லையெனக் கூறி பேரணிக்கு அனுமதி மறுத்தது. மேலும், டெல்லி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து அறிவிப்பை வெளியிட்டது.
இருப்பினும் திட்டமிட்டபடி இன்று பேரணியைத் தொடங்கிய நிலையில், டெல்லி காவல்துறையினர் இளைஞர்களை மெட்ரோ ரயில் நிலையங்கள் போன்றவற்றில் முடக்கியது. மேலும் பேரணி சென்ற இளைஞர்கள் மீது தடியடி, கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு என எல்லை மீறிச் சென்றது.
நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முயன்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் மீது காவல் துறை தடியடி நடத்தியதற்கு திமுக கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறது.

இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைமைக் கழகம், நீட் தோ்வு உள்படப் பல தோ்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி, டெல்லி ஜந்தா் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் ஒரு மாதக் காலமாகத் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றவர்கள் மீது அடக்குமுறை ஏவி விடப்பட்டிருக்கிறது. கண்மூடித்தனமான தாக்குதலைக் காவல்துறை மூலம் நிகழ்த்தியிருக்கிறார்கள்.
அமைதியான அறவழியில் போராடியவர்கள் மீது அதிகாரத் துஷ்பிரயோகத்தை ஏவி விட்டிருக்கிறார்கள். உரிமைகளுக்காக அநீதிகளுக்கு எதிராக குரல் எழுப்புகிறவர்களை அடக்குமுறையால் என்றும் ஒடுக்கிவிட முடியாது.
தலைநகரில் மிகப் பெரிய போராட்டமாக மாறியிருக்கும் இளைஞர்கள் போராட்டத்தைக் கண்ணீர்ப் புகை வீச்சு, இணையதள முடக்கம், மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல் ஆகியவற்றால் முடக்க நினைக்கிறது ஒன்றிய அரசு. கல்விக்காகப் போராடுகிறவர்களின் உரிமைப் போராட்டம் வெல்லட்டும்! மாணவர்களின் உயிர்ப் பறிக்கும் நீட் தேர்வு அறவே ஒழியட்டும்! எனப் பதிவிட்டுள்ளது.






