
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு, தருமபுரி நகராட்சி பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் நகர செயலாளர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கிய ரீல்ஸ் வீடியோ சமூக வலைத்தளையில் பதிவு செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அரசுப் பள்ளி வளாகங்களில் அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என தமிழக முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் பள்ளிக்கல்வித்துறை நிர்வாகம் ஏற்கனவே கடுமையான எச்சரிக்கை விடுத்தது இருந்தனர். அதனை பொருட்படுத்தாமல் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தருமபுரி நகராட்சி பள்ளியில் நடைபெற்ற காமராஜர் பிறந்தநாள் விழாவில், தமிழக வெற்றிக் கழக நகர செயலாளர் விஜி குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பள்ளிக்கு சென்று மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கிய நிகழ்வு மீண்டும் சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.

இதேபோல், தருமபுரி மாவட்டம், பென்னாகரம் மற்றும் ஏரியூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பள்ளிகளில் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வகுப்பறைகள் மாணவர்களிடம் உரையாடினார். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் ஆய்வு செய்தார்.
இதனை எல்லாம் செல்போன் மூலம் வீடியோ எடுத்து, ரீல்ஸ் வீடியோவாக அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
அரசுப் பள்ளி வளாகங்களில் அரசியல் சாயல் ஏற்படும் வகையிலான நிகழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்ற உத்தரவு நடைமுறையில் இருக்கும் நிலையில், இந்த நிகழ்வுக்கு பள்ளி நிர்வாகத்தின் அனுமதி பெறப்பட்டதா? பள்ளிக்கல்வித்துறையின் வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்பட்டதா? என்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ந்து இதுபோன்று பள்ளிகளில் ரீல்ஸ் எடுத்துப் பதிவிடுவது அரசியல் காரணங்களுக்காகவா அல்லது கட்சிகளில் பதவி கிடைக்கும் என்ற நோக்கங்களுக்காகவா என பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகிறது.






