
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் விஜய் கட்சியான தவெக 108 இடங்களை பெற்று பெரும்பான்மை பெற்றது. எனினும் ஆட்சியமைக்க தேவையான 118 இடங்கள் இல்லாததால் தற்போது தமிழ்நாடு அரசியல் சூழல் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
அரசியலமைப்பு சட்டப்படி முதலமைச்சராக பதவியேற்க வைத்து, அதன்பின் சட்டப்பேரவையில் அவரது ஆதரவை நிரூபிக்க வைக்க வழி வகை செய்வது ஆளுநரின் கடமை. ஆனால் ஆளுநரோ 118 உறுப்பினர்களின் ஆதரவு கடிதம் கட்டாயம் வேண்டும் என விஜய்க்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். ஆனால் இதுவரை ஆளுநரை கண்டித்து ஒரு வார்த்தை கூட விஜய் பேசாமல் இருந்து வருகிறது.

இந்த சூழலில் தவெக கட்சி தொடங்கிய போது பாஜகவை கொள்கை எதிரி என்று விஜய் கூறியிருந்தார். மேலும் பாசிச, மதவாத சக்திகளுக்கு எதிராக தனது அரசியல் இருக்கும் என்றும் விஜய் தெரிவித்திருந்தார். எனினும் தமிழ்நாட்டு நலன் சார்ந்த அநேக பிரச்சினைகளுக்கு ஒன்றிய பாஜக அரசை குறிப்பிட்டு விஜய் எந்தவொரு கண்டனமும் தெரிவிக்காமல் இருந்தார். இதனால் விஜய், பாஜகவின் பி டீம் என்று விமர்சிக்கப்பட்டார். இருப்பினும் அவர் பாஜகவை எதிர்த்து பேசாமலே இருந்து வந்தார்.
இந்த சூழலில் தற்போது ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாமல் தவிக்கும், விஜய்க்கு ஆதரவாக திமுக கூட்டணி கட்சியினர் இருந்து வரும் சூழலில், ஆளுநர் அவரை ஆட்சியமைக்க அழைக்காமல் இருந்துள்ளார். இதனை கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுகவினர் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் ஆளுநருக்கு கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

TVK ஆட்சியமைக்க திமுக எந்தவொரு இடையூறும் செய்யாது என்று, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். அதோடு, அரசியல் சட்டப்படி, புதிய ஆட்சி அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் அறிக்கை விடுத்துள்ளார். இவரை தொடர்ந்து கனிமொழி எம்.பி., கலாநிதி வீராசாமி எம்.பி. என அடுத்தடுத்து திமுகவினர் ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர்.
இதுவரை தொடர்ந்து 6-வது நாளாக ஆட்சியமைக்க முடியாமல் தவிக்கும் TVK-க்கு ஆதரவாக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, கமல்ஹாசன் என திமுக கூட்டணி கட்சியினரும் ஆளுநரின் செயலை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதோடு திமுக ஆதரவாளர்களும் ஆளுநரின் இந்த செயலையும், பாஜகவின் சதியையும் சமூக வலைதளங்கள் மூலமாக தோலுரித்து காட்டி கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

விஜய் ஆட்சியமைக்க, அவரால் தீய சக்தி என்று விமர்சிக்கப்பட்ட திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் குரல் கொடுத்து வரும் நிலையில், தன்னை தானே தூய சக்தி என்று சொல்லிக்கொள்ளும் விஜயும், TVK-வும் இதுவரை ஆளுநரை கண்டித்து ஒரு அறிக்கை மட்டுமல்ல, வாயை கூட திறக்கவில்லை.
தேர்தல் முடிவு வெளியாகி இன்றுடன் 5 நாட்கள் ஆகும் நிலையில், இதுவரை ஆட்சி அமைக்க தடை போடும் ஆளுநரை கண்டித்து ஒரு வார்த்தை கூட விஜய் பேசாமல் இருப்பது பலர் மத்தியில் விமர்சனங்களை எழுப்பி வருவதோடு, கண்டனங்களும் குவிந்து வருகிறது.






