
இந்திய அளவில் எளியோருக்கு வேலையும், அதன் வழி உரிய ஊதியமும் அளித்து வரும் வகையில் உருவாக்கப்பட்ட மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டத்தில் (MGNREGA) மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.
இது எளிய மக்களின் மீது பா.ஜ.க அரசு கொண்டிருக்கிற வெறுப்பையும், காந்தியடிகளின் மீதுள்ள வன்மத்தையும் வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
இதனைக் கண்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டது பின்வருமாறு,
“மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு!
தேசத்தந்தை காந்தியடிகளின் மீதுள்ள வன்மத்தால் அவர் பெயரைத் தூக்கிவிட்டு, வாயில் நுழையாத வடமொழிப் பெயரைத் திணித்திருக்கிறார்கள்!

100% ஒன்றிய அரசின் நிதியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்திற்கு இனி 60% மட்டுமே நிதி ஒதுக்குவார்களாம்!
இவை அனைத்துக்கும் மேலாக, நாட்டிலேயே வறுமையை முழுமையாக ஒழித்துச் சாதனை படைத்துள்ளதற்காகவே நம் தமிழ்நாடு தண்டிக்கப்படவுள்ளது! வறுமை இல்லாத மாநிலம் என்பதற்காக, இருப்பதிலேயே குறைவாகத்தான் இத்திட்டத்தின் பயன்கள் தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைக்குமாம்!
பல கோடிப் பேரை வறுமையின் பிடியில் இருந்து மீட்டு, மாண்புடன் வாழ வழிவகுத்த ஒரு திட்டத்தை ஆணவத்துடன் அழிக்கப் பார்க்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு!
மூன்று வேளாண் சட்டங்கள், சாதிவாரி கணக்கெடுப்பு போன்றவற்றில் எப்படி பின்வாங்கினீர்களோ, அதேபோல MGNREGA-வைச் சிதைக்கும் முயற்சியிலும் மக்கள் உங்களை நிச்சயம் பின்வாங்க வைப்பார்கள்! எனவே, மக்களின் சீற்றத்துக்கு ஆளாகாமல் இப்போதே VBGRAMG திட்டத்தைக் கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்!”






