
தேசிய விசாரணை முகமை தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சுமத்தப்பட்டவர்கள் நீண்ட நாட்கள் ஜாமின் பெறுவதற்காக காத்திருப்பதை தவிர்க்க வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மேலும், என்.ஐ.ஏ ஆறு மாதங்களில் வழக்கு விசாரணைகளை முடிக்க வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், இதற்காக சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பது குறித்து டிசம்பர் 16 ஆம் தேதிக்கு முன் ஒன்றிய உள்துறை முடிவு எடுத்து உச்ச நீதிமன்றத்தை அறிவிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும் டெல்லியில் மட்டும் 50 என்.ஐ.ஏ வழக்குகள் நிலுவையில் உள்ளதை டெல்லி உயர்நீதிமன்றம் உச்ச நீதிமன்றத்திற்கு தெரிவித்திருப்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். அதே போல டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் 48 வழக்குகளும், கர்கட்டோமா நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகளும் தற்போது நிலுவையில் உள்ளன.
இதனை குறிப்பிட்ட நீதிபதிகள், மற்ற வழக்குகளுடன் சேர்த்து இந்த வழக்குகளை விசாரிப்பது என்பது வழக்கு விசாரணையை தாமதப்படுத்தும் என்று கூறியதோடு, இதற்காக தனி நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்று தெரிவித்து வழக்கு விசாரணையை டிசம்பர் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.






