அரசியல்

பா.ஜ.க.வும் தேர்தல் ஆணையமும் கூட்டாகச் சேர்ந்து செய்யும் சதி - அம்பலப்படுத்திய முரசொலி !

பா.ஜ.க.வும் தேர்தல் ஆணையமும் கூட்டாகச் சேர்ந்து செய்யும் சதி - அம்பலப்படுத்திய முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (18-11-2025)

பீகார் பாட­மும் எச்­ச­ரிக்­கை­யும்!

பீகார் தேர்தல் முடிவு, தேர்தலுக்கு முன்னதாக நடந்த நிகழ்வுகளை இன்னும் உன்னிப்பாக கவனிக்க வைக்கிறது.

''அனைவருக்கும் பாடங்களை வழங்கி உள்ளது பீகார் சட்டமன்றத் தேர்தல். இத்தேர்தல் முடிவுகள் தேர்தல் ஆணையத்தின் குளறுபடிகளையும் பொறுப்பற்ற செயல்களையும் இல்லாமல் ஆக்கிவிடாது. தேர்தல் ஆணையத்தின் மீதான மரியாதை இதுவரை இல்லாத அளவுக்குக் கீழிறங்கியுள்ளது. வலுவான, நடுநிலையான தேர்தல் ஆணையத்தைக் கோருவது நம் நாட்டு மக்களின் உரிமை. தேர்தலில் வெற்றி பெறாதோரின் நம்பிக்கையையும் பெறும் அளவுக்கு தேர்தல் ஆணையம் நியாயமான முறையில் தேர்தல்களை நடத்திட முன்வர வேண்டும்” என்று மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

''பீகாரில் இந்த முடிவு உண்மையிலேயே ஆச்சரியமளிக்கிறது. ஆரம்பத்தி லிருந்தே நியாயமற்ற முறையில் நடந்த தேர்தலில் நாம் வெற்றி பெற முடியவில்லை. அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டம் இது” என்று சொல்லி இருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

''பீகாரில் SIR ஒரு பெரிய தேர்தல் சதி. பா.ஜ.க. அதைப் பயன்படுத்தி ஒரு பெரிய அரசியல் மோசடியைச் செய்துள்ளது. பீகாரில் செயல்படுத்தப்பட்ட SIR விளையாட்டை மேற்கு வங்கம், தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசம் தொடங்கி வேறு எந்த மாநிலத்திற்கும் கொண்டு வர முடியாது. ஏனென்றால் இந்தத் தேர்தல் சதி இப்போது அதிகமாக அம்பலப்படுத்தப்பட்டு உள்ளது. இனிமேல், அவர்கள் இந்த விளையாட்டை மீண்டும் விளையாட நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. CCTV போல நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

பா.ஜ.க.வின் நோக்கங்களை நாம் அம்பலப்படுத்த வேண்டும். பா.ஜ.க. ஒரு அரசியல் கட்சி அல்ல, அது ஒரு மோசடி” என்று உத்திரப்பிரதேச மாநிலத்தில் இருந்து அகிலேஷ் குரல் கொடுத்துள்ளார்.

பீகாரில் லட்சக்கணக்கான வாக்காளர் பெயர் நீக்கம், அரியானாவில் 25 லட்சம்போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது, பிரேசில் பெண் ஒருவரது பெயர் அரியானா மாநில வாக்காளர் பட்டியலில் இருப்பது, மகாராஷ்டிரா தேர்தல் மோசடி, கர்நாடகா மகாதேவ்புரா தொகுதி போலி வாக்காளர் சேர்ப்பு என்று வெளியாகும் தகவல்கள் அனைத்தையும் சாதாரணமாகக் கடந்து விடக் கூடாது. இது அந்த மாநிலத்தின் பிரச்சினை மட்டுமல்ல; இந்தியாவின் பிரச்சினை. இந்திய ஜனநாயகத்தைக் கேள்விக்குறியாக்கும் பிரச்சினை ஆகும்.

பா.ஜ.க.வும் தேர்தல் ஆணையமும் கூட்டாகச் சேர்ந்து செய்யும் சதி - அம்பலப்படுத்திய முரசொலி !

அனைத்து மோசடிகளையும் அரங்கேற்றிவிட்டு பீகார் தேர்தலை நடத்தியது தேர்தல் ஆணையம். சிறுபான்மையின மக்களையும், பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்காளர்களையும் வாக்குரிமை அற்றவர்களாக மாற்றுவதுதான் தேர்தல் ஆணையத்தின் SIR - பணி.

பீகாரில் பிறப்புச் சான்றிதழ் பெறுவோர் குறைவு. படித்தோர் குறைவு. எனவே அவர்களால் தேர்தல் ஆணையம் கேட்கும் விபரங்களைத் தர இயலவில்லை. 1985 ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்கள் தங்களது ஆவணத்தை மட்டும் இன்றி தங்களது பெற்றோர்களின் ஆவணத்தையும் சேர்த்து சமர்ப்பித்தால் தான் வாக்காளர் பட்டியலில் அவர்களின் பெயர் இடம் பெறும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. பீகார் இளைஞர்கள் பல்வேறு மாநிலங்களில் தற்காலிக வேலைகளுக்காக போய்விட்டார்கள். அவர்களால் ஆதாரங்களை ஒரு மாதத்துக்குள் கொடுக்க முடியவில்லை.

பீகாரில் 19.65 விழுக்காடு மக்கள் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள். 17.7 விழுக்காடு மக்கள் இஸ்லாமியர்களாக உள்ளனர். இவர்களைக் குறி வைத்தே இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் செய்ய நினைத்தது. அதனை நிறைவேற்றியது. பா.ஜ.க.வும் தேர்தல் ஆணையமும் கூட்டாகச் சேர்ந்து செய்யும் சதி ஆகும்.

தேர்தல் ஆணையம் ஒவ்வொரு தொகுதியிலும் மொத்த வாக்குகள் எவ்வளவு, பதிவானது எவ்வளவு என்பதைச் சொல்லவே இல்லை.

முதற்கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 6 நடைபெற்றது. சமஸ்திபூர் மாவட்டம், சரைரஞ்சன் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டு இருந்த ஒரு கல்லூரிக்கு அருகே ஒப்புகை வாக்குச்சீட்டுக்கள் சிதறிக் கிடந்தன. இதைத் தொடர்ந்து மாவட்ட உதவி தேர்தல் அதிகாரியை கண்துடைப்பாக பணி நீக்கம் செய்தார்கள். வாக்குப்பதிவு முடிந்து அனைத்து வாக்கு இயந்திரங்களும் ஆவணங்களும் சீல் வைக்கப்பட்டு ஐந்து அடுக்கு காவல்துறை கட்டுப்பாட்டில் கல்லூரி கட்டிடத்திற்குள் வைக்கப்பட்டிருந்த அதிமுக்கியமான ஆவணங்கள் எப்படி தெருவில் கிடக்க முடியும்?

இவை அனைத்தையும் தமிழ்நாட்டு வாக்காளர்கள் மனதில் வைக்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் வாக்கை உறுதி செய்ய வேண்டும். தங்கள் குடும்பத்தினர் வாக்கை உறுதி செய்ய வேண்டும். தேர்தல் பணியில் இருப்பவர்கள், தங்கள் வாக்குச் சாவடியில் உள்ள அனைவர் வாக்குகளையும் உறுதி செய்ய வேண்டும். அந்த வாக்குகளை மிகச் சரியாக செலுத்த வைக்க வேண்டும். வாக்குப் பதிவு இயந்திரத்தையும் இறுதி வரை கண்காணிக்க வேண்டும்.

பா.ஜ.க.வும் தேர்தல் ஆணையமும் கூட்டாகச் சேர்ந்து செய்யும் சதி - அம்பலப்படுத்திய முரசொலி !

பீகாரில் சொல்லப்பட்ட வாக்காளர்களுக்கும், பதிவான வாக்காளர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. இவை அனைத்தும் இறுதி வரை கண்காணிக்கப்பட வேண்டியது ஆகும். முன்பெல்லாம் யாரோ தவறு செய்வார்கள். தேர்தல் ஆணையத்தில் முறையிடலாம். ஆனால், இப்போது முறைகேட்டுக்கு தேர்தல் ஆணையத்தையே பயன்படுத்தும் அளவுக்கு பா.ஜ.க. தனது திருகு வேலை களைக் காட்டுகிறது.

சிறுபான்மையினர் வாக்குகள் நீக்கப்படலாம். பா.ஜ.க.வினரது எதிர்ப்பு வாக்குகள் பறிபோகலாம். இங்கு தற்காலிக பணிக்காக வந்திருக்கும் வட மாநிலத்தவரை இங்குள்ள வாக்காளர் பட்டியலில் வலிய சேர்க்கலாம். இவை அனைத்தையும் எச்சரிக்கையுடன் கண்காணிக்க வேண்டும்.

பா.ஜ.க.வின் முக்கியமான குறி தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா ஆகிய மூன்று மாநிலங்கள் ஆகும். இங்கெல்லாம் பா.ஜ.க.வால் எதையும் செய்ய முடியவில்லை. அதனால் தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்தப் பார்க்கிறார்கள். மகாராஷ்டிரா, டெல்லி சட்டமன்றத் தேர்தல்களில் பல லட்சம் வாக்காளர்களை நீக்கினார்கள். குறுகிய காலத்தில் போலி வாக்காளர்களைச் சேர்த்தார்கள். அதனால்தான் பீகார் தேர்தல் முடிவுகளை அந்த மாநில சட்டமன்றத் தேர்தலாகச் சுருக்கிப் பார்க்கக் கூடாது. அங்கு நடந்தவைகளில் இருந்து பாடம் கற்று, எச்சரிக்கையுடன் கண்காணிப்புடன் செயல்பட வேண்டும்.

banner

Related Stories

Related Stories