
நாடு முழுதும் தீர்பாயங்களுக்கு ஒரே மாதிரியான நியமனம் நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி வழக்கை 5 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றவேண்டும் என்று தெரிவித்தார்.
இதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், மனுதார்கள் தரப்பிலான வாதங்கள் முடிந்த பின்னர் இந்த கோரிக்கை வைப்பதை ஏற்க முடியாது. இதுவரை என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? தனது அமர்வு வழக்கை விசாரிக்க கூடாது என்று ஒன்றிய அரசு விரும்புகிறது என்று விமர்சித்தார்.

மேலும் தான் விசாரிக்கக்கூடாது என்பதால்தான் நள்ளிரவில் வழக்கை உயர் அமர்வுக்கு மாற்ற மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கடுமையாக விமர்சித்தார். பின்னர் ஒன்றிய அரசின் கோரிக்கையை நிராகரித்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வு வழக்கை 7 ஆம் தேதி விசாரணைக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வரும் 23 ஆம் தேதி ஓய்வு பெறும் நிலையில், வழக்கை தாமதப்படுத்தினால் அவரால் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கமுடியாது என்பதால் ஒன்றிய அரசு இந்த செயலை செய்ததாக விமர்சனம் எழுந்துள்ளது. சமீபத்தில் இந்துத்துவ ஆதரவாளர் ஒருவர் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது செருப்பு வீசி தாக்குதல் நடத்த முயன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.








