அரசியல்

8 ஆண்டுகளுக்கு முன்பே செய்திருந்தால், பல கோடி ரூபாயை சேமித்திருக்கலாமே?! : ஜிஎஸ்டி குறித்து முதலமைச்சர்!

“8 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால், இந்தியக் குடும்பங்கள் இன்னும் பல கோடி ரூபாயை எப்போதோ சேமித்திருக்குமே?” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து!

8 ஆண்டுகளுக்கு முன்பே செய்திருந்தால், பல கோடி ரூபாயை சேமித்திருக்கலாமே?! : ஜிஎஸ்டி குறித்து முதலமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

ஒன்றியத்தில் பா.ஜ.க ஆட்சி அமைத்த பிறகு, எளிய உழைக்கும் மக்கள், சிறுபான்மையின மக்கள் உள்ளிட்ட நாட்டின் 90% மக்கள் பொருளாதாரம் சார்ந்தும், கல்வி சார்ந்தும், உரிமை சார்ந்தும் ஒடுக்கப்பட்டு வருகின்றனர்.

இவை, வெறுமென வெறுப்பு நடவடிக்கையாக மட்டுமல்லாமல், திட்டமிட்டு சட்டமியற்றி அதன் வழி செயல்படுத்தும் ஏகாதிபத்திய அடக்குமுறை நடவடிக்கையாக அமைந்து வருகிறது.

அவ்வாறு ஒன்றிய பா.ஜ.க அரசால் அமல்படுத்தப்பட்ட ஏகாதிபத்திய நடவடிக்கையில், தவிர்க்க முடியாத ஒன்றாக ஜிஎஸ்டி வரி விதிப்பு அமைந்துள்ளது.

2017ஆம் ஆண்டு மக்களை அச்சத்திலும், துயரத்திலும் ஆழ்த்திய இந்த அதிகப்படியான ஜி.எஸ்.டி வரியை, அமல்படுத்தியதே பா.ஜ.க.தான் என்பதை மக்கள் உணராததைபோல், மக்களுக்கான விலைவாசியை குறைத்துள்ளோம் என ஜி.எஸ்.டி வரி குறைப்பு குறித்து வேடம் ஆடத் தொடங்கியுள்ளது பா.ஜ.க.

8 ஆண்டுகளுக்கு முன்பே செய்திருந்தால், பல கோடி ரூபாயை சேமித்திருக்கலாமே?! : ஜிஎஸ்டி குறித்து முதலமைச்சர்!

இந்நிலையில், இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ““ஜி.எஸ்.டி. வரிக்குறைப்பாலும் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பை உயர்த்தியதாலும் இந்தியர்கள் 2.5 லட்சம் கோடி ரூபாயைச் சேமிக்கலாம்” என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இதைத்தானே தொடக்கத்தில் இருந்தே எதிர்க்கட்சிகளான நாங்கள் வலியுறுத்தி வந்தோம்? 8 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால், இந்தியக் குடும்பங்கள் இன்னும் பல கோடி ரூபாயை எப்போதோ சேமித்திருக்குமே?

மேலும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வரிக்குறைப்பில் சரிபாதி அளவு மாநில அரசுகளின் பங்கிலிருந்துதான் செய்யப்படுகிறது. இந்த உண்மையை ஒன்றிய அரசு மறைப்பதாலும் பாராட்ட மறுப்பதாலும் இதனைச் சுட்டிக்காட்ட வேண்டியது எனது கடமையாகிறது.

மற்றொரு புறம், ஒன்றிய பா.ஜ.க. அரசு மாநிலங்களுக்கு நியாயமாகச் சேர வேண்டிய நிதியைத் தர மறுத்து வருகிறது. இந்தித் திணிப்பை ஏற்க மறுக்கும் ஒரே காரணத்துக்காக, ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதி மறுக்கப்படுகிறது. இந்த அநீதி எப்போது முடிவுக்கு வரும்?

தங்கள் உரிமைகளைப் பாதுகாத்து, தம் மக்களுக்காக முன்நிற்கும் மாநில அரசுகளைத் தண்டிப்பதன் வழியாக இந்தியா வளர்ச்சி பெற முடியாது. கூட்டாட்சிக் கருத்தியலுக்கு மதிப்பளியுங்கள், உரிய நிதியை விடுவியுங்கள், மக்களுக்கு நியாயமாகச் சேர வேண்டியதைத் தந்து அவர்களைப் பயனடைய விடுங்கள்!” என பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories