திருச்சி மண்டல அளவில் அறிவுசார் சொத்துரிமை சார்ந்த தொழில்முனைவோர் (iTNT) மையத்தின் துவக்க விழா இன்று நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொழில்நுட்ப துறை அமைச்சர் பி.டி.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "மூன்றாவது மொழியை கற்று கொள்ள வேண்டும் என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீண்டும் கூறுகிறார். தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழ்நாடு வளர்ந்துள்ளது.
தமிழ் எங்களது அடையாளம். ஆங்கிலம் எங்களுக்கான இணைப்பு மொழி. இரு மொழி கொள்கை மூலம் தமிழர்கள் உலகம் முழுவதும் பரந்து விரிந்து பல்வேறு துறைகளில் சாதித்து வருகிறார்கள். இங்கு படித்தவர் அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்ப துறையின் முதன்மை அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
அரசின் நிதியை முறையாக பயன்படுத்தி, தமிழ்நாடு திறன்வாய்ந்த மாநிலமாக இருக்க இரு மொழி கொள்கை தான் காரணம். அது ஒன்றிய அரசுக்கும் தெரியும். தெரிந்திருந்த போதும் வீண் வாதத்திற்காக நம் மீது ஏதாவது ஒன்றை திணிக்கிறார்கள்"என்று கூறினார்.