பீகார் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு புதிய வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 65 முதல் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவுக்கு ஆதரவாக இந்த நீக்கம் நடத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனிடையே வரைவு வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் இருப்பது அம்பலமாகியுள்ளது தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டை கேள்விக்குள்ளாகியுள்ளது.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலும் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களிடம் ஆதார் அட்டை விபரங்களை பெற்று மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம், 11 ஆவணங்களில் ஒன்றை கட்டாயமாக வழங்க வேண்டும் என்று நிர்பந்திக்க கூடாது என்றும், வாக்குச்சாவடி முகவர்கள், ஆன்லைன் மூலமும் விண்ணப்பம் பெறவேண்டும் என்றும், நேரில் வந்து மட்டுமே ஆவணங்களை தரவேண்டும் என்று கூறக்கூடாது என்றும் தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.