முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொகுதியில் போலி வாக்காளர்கள் இருப்பதாக பாஜக எம்.பி. அனுராக் தாகூர் விமர்சித்திருந்தார். மேலும் ஒரே வீட்டை ஏராளமானோர் வாக்காளர் அடையாள விலாசமாக குறிப்பிட்டிருந்ததாகவும் கூறியிருந்தார். இதனை தமிழ்நாடு பாஜகவும் தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தது.
இந்த நிலையில், பாஜக எம்.பி. அனுராக் தாகூர் கூறிய வீடு தனி வீடல்ல, அது அடுக்குமாடி குடியிருப்பு பகுதி என்றும் தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு தளம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு தளம் தனது சமூகவலைத்தள பக்கத்தில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கொளத்தூர் தொகுதி ஆண்டாள் அவென்யூவில் உள்ள 11ம் எண் என்பது தனி வீடல்ல, அது அடுக்குமாடி குடியிருப்பு பகுதி.
வாக்குச்சாவடி எண் 84 விவரங்களின்படி, வரிசை எண் 40 முதல் 75 வரையில் உள்ள வாக்காளர்கள் 11 எண் கொண்ட ஏ.எஸ். வீனஸ் கோர்ட் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
இதில், ரஃபி என்பவரின் பெயர் வரிசை எண் 50லும், 52ல் கணவர் என்கிற இடத்திலும் இடம்பெற்றுள்ளது. மேலும், வரிசை எண் 348, 352 ஆகியவற்றில் தந்தை என்கிற இடத்தில் இடம்பெற்றுள்ளது.
ஆனால், காணொளியில் குறிப்பிட்டதுபோல் ரஃபி என்ற பெயரில் 3 வாக்காளர்கள் இல்லை. மேலும், வாக்குச்சாவடி எண் 157ல் (வேறு பகுதி) ரஃபியுல்லா பெயர் தந்தை, கணவர் என்ற இடங்களில் வருகிறது.
11 எண் கொண்ட குடியிருப்பில் இஸ்லாமியர்கள் மட்டுமே வசிப்பது போன்ற தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர். அங்கு அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர்"என்று கூறப்பட்டுள்ளது.