அரசியல்

“ECI செயல்பாடு ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல, இது நாட்டைச் சூழந்திருக்கும் பேராபத்து!”: ஆசிரியர் கி.வீரமணி!

ராகுல் காந்தியின் ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டுக்கு என்ன பதில்? என தலைப்பிட்டு வாக்குகள் திருடப்பட்டுள்ளதைக் குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அறிக்கை.

“ECI செயல்பாடு ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல, இது நாட்டைச் சூழந்திருக்கும் பேராபத்து!”: ஆசிரியர் கி.வீரமணி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

ராகுல் காந்தியின் ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டுக்கு என்ன பதில்? என தலைப்பிட்டு வாக்குகள் திருடப்பட்டுள்ளதைக் குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

‘கவர்தல்’ என்னும் தமிழ்ச்சொல்லுக்கு, “வசப்படுத்துதல், விரும்புதல், பெற்றுக்கொள்ளுதல்” என்னும் பொருள்களுடன், “கொள்ளையிடல், திருடல்” என்றும் பொருள்கள் உண்டு.

“வாக்குகளைக் கவர்தல்” என்பதைப் பாரதிய ஜனதா கட்சி இரண்டாம் வகையில் புரிந்துகொண்டுள்ளதோ?

சந்தேகத்துக்குரிய வகையில் இந்தியத் தேர்தல்கள் நடைபெறுவதாகக் கடந்த சில ஆண்டுகளாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் பல திசைகளில் இருந்தும் எழுந்து வருகின்றன. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் முறைகள், தேர்தல் தேதி அறிவிப்புகள், தேர்தல் ஆணையர்களின் நியமனம், அரசியல் கட்சிகளின் அங்கீகாரம், கட்சி உடைப்புகளின் போது தேர்தல் ஆணையம் நடந்துகொள்ளும் முறை என்று பலவற்றின் மீதும் சந்தேகங்களும், அதற்கான நியாயமான காரணங்களும் இருப்பது இந்தியாவின் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்தாகும்.

சந்தேகத்திற்கு அப்பால் செயல்படுகிறதா தேர்தல் ஆணையம்?

அரசியலுக்கும், அதிகாரத்துக்கும் அப்பாற்பட்டு இருக்க வேண்டிய சுதந்திரமான அமைப்பாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி உருவாக்கப்பட்டது இந்தியத் தேர்தல் ஆணையம். ஆனால், அதன் செயல்பாடுகள் சந்தேகத்துக்குரிய வகையில் இருப்பது ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல.

இந்தச் சந்தேகங்களை உறுதி செய்யும் வகையில், வெளிப்படையான குற்றச்சாட்டை இந்தியாவைப் பல்லாண்டுகள் ஆட்சி செய்த கட்சியும், தற்போதைய எதிர்க் கட்சியுமான காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி அவர்கள் ஆதாரங்களுடன் முன்வைத்திருக்கிறார்.

7.8.2025 அன்று காங்கிரஸ் கட்சியின் தலைமை யகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, பெங்களூரு மத்திய நாடாளுமன்றத் தொகுதியின் ஒரு பகுதியான மகாதேவ்புரா சட்டப்பேரவைத் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் செய்யப்பட்டுள்ள மோசடியைக் காட்சிப் பட விளக்கத்துடன் தெளிவுபடுத்தினார் ராகுல்காந்தி. அந்த ஒரு தொகுதியில் மட்டுமே 1,00,250 வாக்குகள் திருடப்பட்டிருப்பதாக (Vote chori) அவர் வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

யாரும் வசிக்காத வீட்டில் அதிக வாக்குகள் வந்தது எப்படி?

“புதிய வாக்காளர்கள் என்ற பெயரில் போலி வாக்காளர்களைச் சேர்த்தல், ஒரே அறை கொண்ட முகவரியில், யாரும் வசிக்காத வீட்டில் எண்ணற்ற வாக்குகள் பதிவு, ஒளிப்படங்கள் இல்லாமல் வாக்காளர் பதிவு, ஒரே நபருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் வாக்கு, ஒரே வாக்குச்சாவடியில் ஒருவருக்கு இரண்டு வாக்கு, ஒரே நபருக்கு வெவ்வேறு மாநிலங்களில் வாக்கு - இப்படி பல்வேறு வகைகளில் முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளன” என்று அவர் இந்திய ஜனநாயகத்துக்குப் பேராபத்து விளைவிக்கும் அணுகுண்டை அம்பலப்படுத்தியுள்ளார்.

“ECI செயல்பாடு ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல, இது நாட்டைச் சூழந்திருக்கும் பேராபத்து!”: ஆசிரியர் கி.வீரமணி!

ஆட்சிக்கே காரணமான வாக்கு மோசடி!

இந்தியாவில் ஆட்சியைப் பிடிக்க எல்லா தொகுதிகளிலும் இத்தகைய மோசடிகளைச் செய்ய வேண்டியதில்லை.

தங்களுக்கு முழு ஆதரவு உள்ள தொகுதிகளை விட்டுவிடலாம். கடுமையான எதிர்ப்பு கொண்ட தொகுதிகளிலும் இத்தகைய மோசடிகளைச் செய்தால் அம்பலப்பட்டுவிடுவோம் என்று கருத இடம் உண்டு.

ஆனால், வெற்றியை முடிவு செய்ய இயலாத தொகுதிகளை கடும் போட்டி நிலவும் தொகுதிகளை முன்கூட்டியே அறிந்து, அதில் இத்தகைய மோசடிகளைச் செய்தாலே போதும் என்று பா.ஜ.க. கணக்கிட்டிருக்கக் கூடும். தேர்தல் முன் கணிப்புகளின் அடிப்படையில் ஆட்சி அமைக்க இரண்டு கட்சிகளின் வேறுபாடுகளைக் கடக்க எவ்வளவு தொகுதிகள் தேவையோ அவற்றில் மட்டும் ‘தனிக் கவனம்’ செலுத்தி, வாக்காளர் பட்டியலில் மோசடி செய்தாலே போதுமானது என்பதே பா.ஜ.க.வினரின் கணக்கு! இதைத் தான் ராகுல் காந்தி அவர்களும் சரியாக வெளிப்படுத்தியுள்ளார்.

(2019-இல் தங்கள் ஆட்சியைத் தக்க வைக்க வேண்டிய சூழலில் 22 தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில், தி.மு.க. 13 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை என்பதையும், அ.தி.மு.க. தங்கள் ஆட்சியைக் காப்பாற்றத் தேவையான 9 தொகுதிகளில் மட்டும் கவனம் செலுத்தி அவற்றில் வெற்றி பெற்றதன் மூலம் ஆட்சியில் தொடர்ந்ததையும் நினைவில் கொள்க)

தேர்தல் ஆணையம் உடந்தையா?

பாரதிய ஜனதா கட்சி, இத்தகைய கணக்குகளை ஆட்சியின் கண்களையும், காதுகளையும் பயன்படுத்தி அறிந்து, அவற்றில் மட்டும் ‘கவனம்’ செலுத்துவதைத் தனது தேர்தல் உத்தியாக வைத்துள்ளது.

வாக்காளர் பட்டியலின் மின்னணு வடிவத்தைத் தர வேண்டினால், தேர்தல் ஆணையம் மறுப்பதாகவும், அவற்றையும், வாக்குப் பதிவின் சிசிடிவி காட்சிகளையும் வழங்கினால், நாடு முழுக்க நடந்திருக்கும் மாபெரும் தேர்தல் மோசடியை 30 நொடிகளில் அம்பலப்படுத்திவிடுவோம் என்று ராகுல்காந்தி அறைகூவல் விடுத்துள்ளார்.

இந்த வாக்குத் திருட்டுக்குத் தேர்தல் ஆணையத்தின் ஒத்துழைப்பு இருக்கிறது என்பது திடீர் அதிர்ச்சிச் செய்தி இல்லை என்றாலும், அது நாட்டைச் சூழந்திருக்கும் பேராபத்து ஆகும்.

அது மட்டுமல்லாமல், உறுதிமொழிப் பத்திரத்தில் கையொப்பமிட்டு இத்தகைய குற்றச்சாட்டை வைக்க முடியுமா என்று தேர்தல் ஆணையம் மிரட்டல் விடுத்துள்ளது. ஆனால் அதனையும் துணிவுடன் எதிர் கொண்டு, ‘நான் மக்கள் பணியாளன். அரசியல்வாதி. அனைவரின் முன்னிலையில் நாட்டுக்கு நான் சொல்லுகிறேன். இதையே உறுதிமொழிப் பத்திரமாக ஏற்றுக் கொள்ளலாம்’ என்று பதில் சொல்லியிருக்கிறார்.

“ECI செயல்பாடு ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல, இது நாட்டைச் சூழந்திருக்கும் பேராபத்து!”: ஆசிரியர் கி.வீரமணி!

சண்டிகர் மேயர் தேர்தலில் என்ன நடந்தது?

சண்டிகர் மேயர் தேர்தலில், ஆம் ஆத்மிக்கு ஆதரவாகப் பதிவான வாக்குகளைத் தேர்தல் அலுவலர் திருத்தி, செல்லாத வாக்குகள் ஆக்கி, அதன் மூலம் பா.ஜ.க.வை வெற்றி பெறவைத்தது காணொலி ஆதாரத்தின் மூலம் வெளிவந்ததால் தான் நீதிமன்றத்தை நாட முடிந்தது.

ஆளும் பா.ஜ.க.விற்கு ஆதரவாக மகா ராட்டிராவிலும், வாக்காளர் பட்டியலில் குழப்பங்கள் செய்யப்பட்டு, உண்மையான வாக்காளர்கள் நீக்கப்பட்டு, போலி வாக்காளர்கள் சேர்க்கப் பட்டிருப்பதாக சமாஜ்வாடி கட்சியின் அபு ஆஸ்மி குற்றம்சாட்டியுள்ளார்.

கேரளாவில் வாக்குத் திருட்டு நடந்ததால்தான் நாடாளுமன்றத் தேர்தலில் முதல் முறையாக ஒரு தொகுதியை (திருச்சூர்) பிஜேபியால் கைப்பற்ற முடிந்தது என்று கேரள எதிர்க்கட்சித் தலைவர் சதீசன் குற்றம் சாட்டியுள்ளார்.

பீகாரில் நடப்பது என்ன?

பீகாரில் சிறப்பு தீவிரத் திருத்தம் என்ற பெயரில் வாக்காளர் பட்டியலில் இருந்து பலரது பெயரை நீக்க பா.ஜ.க. முயல்வதாகவும், அதற்கு தேர்தல் ஆணையம் உதவுவதாகவும் எதிர்க்கட்சிகள் முறையிட்டு, இந்திய நாடாளுமன்றமே அமளியில் மூழ்கியுள்ளது.

இது தொடர்பாக ஜனநாயக சீர்திருத்தத்துக்கான அமைப்பு தொடர்ந்த வழக்கில், நீக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை ஏன் தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு வழங்கக் கூடாது? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

‘ஏன் நீக்கினோம் என்பதைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை’ என்று தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது என்பதையும் நாடு கவனித்துக் கொண்டுதான் உள்ளது.

வாக்குகளைத் திருடுவதிலும், தேர்தல்களைத் தங்களுக்கு ஆதரவாக மாற்றுவதிலும், பல்வேறு வகை மோசடிகளை பா.ஜ.க. மேற்கொள்கிறது என்பதற்கு இவையெல்லாம் சான்றுகள் அல்லவா?

‘2024 நாடாளுமன்றத் தேர்தலில் இத்தகைய மோசடிகளால் தான் பாரதிய ஜனதா வெற்றி பெற்றிருக்கிறது’ (அதிலும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல், சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்தது) என்ற குற்றச்சாட்டுக்குத் தேர்தல் ஆணையம் உரிய பதிலை அளிக்க வேண்டும். தேர்தல்களில் வெளிப்படைத் தன்மை வேண்டுமென்று சமூகச் செயல்பாட்டாளர்கள் நீதிமன்றத்தைப் பல காலங்களிலும் நாடியிருக்கிறார்கள். இப்போதும் இந்திய ஜனநாயத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்தான சூழலில் நீதிமன்றம் இதில் தலையிடுவது அவசியமாகிறது.

அறிவியல் முறைப்படி, வாக்குத் திருட்டை வெளிக்கொண்டுவந்துள்ள காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவர் ராகுல்காந்தி அவர்களுக்கு நமது வாழ்த்துகள் - பாராட்டுகள்!

பா.ஜ.க. அரசின் வாக்காளர் மோசடியை அம்பலப்படுத்துவது அவசியம்

நடந்திருக்கும் ‘வாக்குத் திருட்டை’, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டோர் மக்களுக்குப் புரியவைக்க வேண்டும்; பாசிசப் போக்குடன் நடந்துகொள்ளும் பா.ஜ.க. முழுமையான பாசிச நாடாக இந்தியாவை ஆக்குவதற்கு மேற்கொள்ளும் சதிகள் அம்பலப்படுத்தப்பட வேண்டும்.

தங்களுக்கிருக்கும் ஊடக பலத்தாலும், நுண்ணறிவுப் பிரிவுகளின் செயல்பாடுகளாலும், இந்தப் பிரச்சினையிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்ப பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.சும் ஒரு போதும் தயங்காது.

எவ்வளவு முயற்சிகள் நடந்தாலும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் ‘ஒரு மனிதர் - ஒரு வாக்கு’ என்ற அடிப்படைக் கட்டமைப்பை ஒழித்து, வாக்குகளைத் திருடும் மோசடியை மக்களுக்கு விளக்கப்படுத்தி, தங்களின் உரிமை திருடப்படுவதை உணரச் செய்வது அவசியம் - அவசரம்!

banner

Related Stories

Related Stories