கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு திடீர் நிலச்சரிவு ஏற்பட்டதால், சுமார் 330க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார் 400 பேர் காயமடைந்தனர். இதனால், கேரள மாநிலமே மீளாத துயரத்திற்கு உள்ளானது.
வயநாடு நிவாரணத்துக்காக தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து, கேரளத்திற்கு உதவிகள் குவிந்தன. இந்த இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ஏராளமானோர் நிதியுதவி செய்தனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதியில் உலா மக்களுக்கு உடனடி நிவாரணமாக ரூ.10 ஆயிரத்தை கேரள அரசு அறிவித்தது.
மேலும், இந்த தொகை சம்மந்தப்பட்ட மக்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இவ்வாறு நிவாரணமாக வழங்கப்பட தொகையில் இ.எம்.ஐ யாக ரூ. 2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை பிடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனிடையே கேரள உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டது. அப்போது பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களின் கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில், வயநாடு நிலச்சரிவு பேரிடரில் பாதிக்கப்பட்டோரின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வாய்ப்பு இல்லை என கேரள உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பதிலளித்துள்ளது.
மேலும், பேரிடர் மேலாண்மை சட்டத்தில் கடன் தள்ளுபடி தொடர்பான பிரிவுகள் தற்போது திருத்தச்சட்டம் மூலம் நீக்கப்பட்டதாக ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. ஒன்றிய அரசின் இந்த பதிலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.