
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் சுற்றுலா பயணிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் உயிரிழந்த கொடூர சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் போர் பதற்றம் ஏற்பட்டது.
நமது நாட்டின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தானின் ஏவுகனைகளை இந்திய ராணுவம் எளிதாக முறியடித்தது. இதனைத் அடுத்து இருநாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, தாக்குதல் தொடர்வதை கைவிட்டனர்.
இந்நிலையில் பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், ஒரு மாதத்திற்கு மேலாக சுதந்திரமாக சுற்றுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டி உள்ளார்.
இது குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள ஜெய்ராம் ரமேஷ்,"காஷ்மீர் மாநிலம் பஹல்காமில், அதிபயங்கர தாக்குதலை நடத்திய உண்மை தீவிரவாதிகள், சுதந்திரமாக சுற்றுகிறார்கள். இவர்கள், 2023-டிசம்பரில் பூஞ்ச் மற்றும் கஹாங்கிர் பகுதிகளிலும், 2024-அக்டோபரில் குல்மார்க் பகுதியிலும் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன. இந்தப் பயங்கரவாதிகள் 18 மாதங்களாக சுற்றித் திரிகின்றனர்” என தெரிவித்துள்ளார்.








