தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பல மாதங்களாக ஒப்புதல் வழங்காத, தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய, அரசியல் உள்நோக்கத்துடன் திருநெல்வேலி பா.ஜ.க மாவட்ட செயலாளர் வெங்கடாச்சலபதி மனுதாக்கல் செய்திருந்தார்.
இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்ற உத்தரவிற்கு எதிராக பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு பெற்ற அதிகாரத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர் பி.வில்சன், “இந்த தீர்ப்பு செல்லுபடியாகாது. தமிழ்நாடு அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்” என திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி, “தமிழ்நாடு அரசே துணைவேந்தர்களை நியமிக்கலாம் என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பு வழங்கியதற்கு பிறகு, சென்னை உயர்நீதிமன்றம் அரசியல் உள்நோக்கத்தோடு இதற்கு தடை ஆணை வழங்கியிருக்கிறது. இது திட்டமிட்ட அரசியல் சதி.
விடுமுறைகால நீதிமன்றத்தில் அவசர அவசரமாக, இந்த வழக்கு விசாரிக்கப்பட வேண்டிய அவசியமென்ன? தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தோடு, இந்த தடை ஆணை வழங்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில், இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருக்கிறது என அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டிய நிலையிலும், சட்டத்தை வளைத்து இந்த தடையாணையை வழங்கியிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.
அரசியல் ரீதியாக ஆர்.எஸ்.எஸ் தொடர்பு கொண்ட நீதிபதிகள்தான், இதற்கு தடை வழங்கியுள்ளார்கள். இந்த தடையாணையின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் உள்ளது” என கண்டனம் தெரிவித்துள்ளார்.