கேரளாவில் கடந்த ஆண்டு தொழில்நுட்ப பல்கலைக்கழகம், டிஜிட்டல் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர்களை நியமனம் செய்ய மாநில அரசு தேர்வு பட்டியலை ஆளுநராக இருந்த ஆரிப் முகமது கானுக்கு அனுப்பியது. அந்த பட்டியலை அவர் தவிர்த்து, தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு வேறு 2 பேரை தற்காலிக துணைவேந்தர்களாக நியமனம் செய்து உத்தரவிட்டார்.
ஆளுநரின் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மாநில அரசு கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. அதில், மாநில அரசு பரிந்துரைத்த தேர்வு பட்டியலை தவிர்த்து, பல்கலைக்கழகங்களுக்கு தற்காலிகமாக துணைவேந்தர்களை ஆளுநர் நியமித்து உள்ளதாகவும், இதனால் ஆளுநர் பல்கலைக்கழக சட்டங்களுக்கு புறம்பாக செயல்பட்டு உள்ளதாக கூறப்பட்டிருந்தது.
எனவே, ஆளுநரின் துணைவேந்தர்கள் நியமன உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவை கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது.
அதில், பல்கலைக்கழகங்களுக்கு தற்காலிகமாக துணைவேந்தர்களை நியமிக்கும்போது, மாநில அரசு வழங்கும் தேர்வு பட்டியலில் இருந்து மட்டுமே நியமனம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.
எனவே, கேரள தொழில்நுட்ப பல்கலைக்கழகம், டிஜிட்டல் பல்கலைக்கழகத்துக்கு தற்காலிக துணை வேந்தர்களை நியமனம் செய்த கேரள ஆளுநரின் உத்தரவை ரத்து செய்தும் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.