
ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து இரு ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக ஒன்றிய அரசு அறிவித்தது. இதனால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
ஆனால் ஒன்றிய 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றாலும் விவசாயிகளுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை இன்னும் வழங்கப்படவில்லை.அதற்கான அறிவிப்பாணை இன்னும் வெளியிடவில்லை. இதனைத் தொடர்ந்து பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் மீண்டும் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த போராட்டத்தின்போது விவசாயிகள் மீது ட்ரோன் மூலம் புகைக்குண்டு வீசி தாக்குதல், ரப்பர் குண்டு மூலம் தாக்குதல் நடத்தியது பாஜக அரசு. இந்த நிலையில், இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காத நிலையில், மே 7 ஆம் தேதி மீண்டும் போராட்டம் நடைபெறும் என பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட ஒன்றிய அரசின் பேச்சுவார்த்தை திடீரென்று ரத்து செய்யப்பட்டததைத் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்துக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து இன்று அதிகாலை விவசாய சங்க தலைவர் ஜக்ஜித் சிங் தாலேவால் கைது செய்யப்பட்டுள்ளார்.இவர் கடந்த மாதம் வரை 4 மாதம் உண்ணாவிரத போராட்டம் நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல ஏராளமான விவசாய தலைவர்களும் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.








