ஒன்றிய அரசு மக்களவையில் அறிமுகம் செய்துள்ள வக்ஃபு சட்டத் திருத்த முன்வரைவினை (The Waqf (Amendment) Bill, 2024) முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அரசினர் தனித் தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்துக்கு பாஜகவை தவிர அனைத்து கட்சிகளும் ஆதரவளித்தன. இந்த நிலையில், இஸ்லாமியர்களே ஏற்காதபோது வக்ஃபு சட்ட திருத்தத்தை ஏன் மேற்கொள்ளவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில், "ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டுவரவுள்ள வக்ஃபு சட்டத் திருத்த முன்வடிவினை எதிர்த்துத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். இஸ்லாமியர்களிடம் இருந்து எந்தக் கோரிக்கையும் எழாத நிலையில் ஒரேயடியாகப் பல திருத்தங்களை மேற்கொண்டு வக்பு அமைப்பின் செயல்பாட்டையே முடக்கும் நோக்குடன் பா.ஜ.க. செயல்படுகிறது.
யாருக்காக இந்தச் சட்டத் திருத்தங்களைக் கொண்டுவருவதாகச் சொல்லப்படுகிறதோ அவர்களே இதனை ஏற்றுக்கொள்ளாதபோது இதற்கான தேவை என்ன? மக்களைப் பிளவுபடுத்தும், அரசியலமைப்பு வழங்கியுள்ள மதச் சுதந்திரத்தில் தலையிடும் இதனை ஒன்றிய அரசு முழுவதுமாகத் திரும்பப் பெறவேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் எண்ணம்!"என்று கூறியுள்ளார்.